சந்தணுவின் மகன் தேவவிரதன்
![]() |
| கங்கை தேவவிரதனை சந்தனுவிடம் ஒப்படைத்தல் |
அப்போது கங்கை சந்தனுவிடம், "அரசே ! இவன் உமது மகன் காங்கேயன். இவனை தேவவிரதன் என்றும் அழைப்பார்கள். அத்துடன், நான் தங்களுக்கு முன்பு கொடுத்த வாக்கின் படியே இவனை அனைத்துக் கலைகளிலும் வல்லவனாக வளர்த்து உள்ளேன்.
இவனை வெல்பவர் இந்தப் பாரத தேசத்திலேயே இது வரையில் யாரும் இல்லை. இனி யாரும் இருக்கப் போவதும் இல்லை. இவனுக்கு தனுர் வித்தையை சொல்லிக் கொடுத்தவர் பரசுராமர். அத்துடன் அரசியல், தர்மம், இராஜ நீதி போன்ற பல விஷயங்களையும் இவன் வஷிஸ்டர் பெருமானிடம் சீடனாக இருந்து கற்றுக் கொண்டான்.
இப்படிப் பட்ட ஒரு அறிஞனை இப்போது உங்களது மகனாக, உங்களிடமே ஒப்படைக்கிறேன். இத்துடன் எனது அனைத்துக் கடமைகளும் முடிந்துவிட்டது" என்று கூறினாள்.
பிறகு தனது மகனான காங்கேயன் எனப்படும் தேவவிரதனிடம், "மகனே! இவரே உனது தந்தையான மகாராஜா சாந்தனு. இனி உனக்கு எல்லாமே இவர் தான். ஆனால், அதே சமயத்தில் நீ எப்போதெல்லாம் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாயோ! அப்போதெல்லாம் நான் உன் முன்னாள் தோன்றுவேன்" என்று கூறிவிட்டு மறைந்தாள்.
கங்கை அவ்வாறு சொல்லி விட்டு சென்ற மாத்திரத்தில், சந்தனு தேவவிரதனை பாசத்துடன் " மகனே!" என்று கூறிய படி நெருங்கினான். தேவவிரதனும், சந்தனுவை, "தந்தையே!" என்று கூறியபடி அன்புடன் நெருங்கினான். இருவரும் கண்களில் கண்ணீர் பெருக ஒருவரை, ஒருவர் அணைத்துக் கொண்டனர்.
பிறகு, சந்தனு தனது மகன் தேவவிரதனுடன் அளவளாவி உரையாடிய படி அவனை அஸ்த்தினாபுரத்தின் மாளிகைக்கு அழைத்து வந்தான். அடுத்த நாளே அவன் சபையைக் கூட்டி, தனது மகன் சந்தனுவை அவையில் உள்ள அனைவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான்.
அப்போது அறிஞர்கள் பலர் தேவவிரதனின் அறிவாற்றலை எண்ணற்ற கேள்விகள் மூலம் சோதித்து, அவன் கூறிய பதில்களால் அவனது அறிவின் திறனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அத்துடன் தேவவிரதனே நாட்டை ஆள சிறந்தவன் என்றார்கள். அதனால், சந்தனு பெருமை கொண்டான்.
அத்துடன் தேவவிரதன் தன்னுடைய ஈகை குணம், பெருந்தன்மை, பெரியோர்களை மதித்தல் போன்ற பல நல்ல பண்புகளால் அஸ்த்தினாபுரத்தின் பிரஜைகள் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தான். ஒரு நல்ல நாள் பார்த்து தேவவிரதனை இளவரசனாக முடி சூட்டினான் சந்தனு.
- தொடரும்

No comments:
Post a Comment