Monday, November 29, 2021

குட்டிக் கதை

குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி, அவற்றை ஏதாவது ஒரு வகையில் இல்லாமல் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

முதல் சீடன் உடனே ஒரு மண்வெட்டியை எடுத்து பக்கத்தில் ஒரு பெரும் பள்ளம் வெட்டி, அதனுள் அந்தப் பாறையைத் தள்ளி, அதன்மேல் மண்ணைப் போட்டு மூடினான்.

இரண்டாம் சீடன் ஒரு சுத்தியலை எடுத்து, பாறையைத் தூள் தூளாக நொறுக்கினான்.

மூன்றாவது சீடன் ஓர் உளியை எடுத்து, பாறையில் ஓர் அழகான சிற்பம் வடித்தான்.

ஆக மூன்று பேரும் அந்தப் பாறையை இல்லாமல் செய்துவிட்டனர். முதல் சீடன் செய்தது மறைத்தல். இரண்டாமவன் செய்தது அழித்தல். மூன்றாம் சீடன் செய்தது ஆக்கல். ஆக, மூன்றாம் சீடனின் செய்கையே சிறந்தது எனப் பாராட்டிய குருநாதர், மேலும் ஓர் உபதேசமும் அதில் அடங்கி இருப்பதாகக் கூறினார்.

"அதாவது, அவன் அந்த சிற்பத்தை உருவாக்கும் பொழுது, புதிதாக சிற்பத்தை எங்கிருந்தோ உருவாக்கவில்லை. அந்தப் பாறையிலிருந்து தேவையற்ற பகுதியை நீக்கினான், அவ்வளவுதான். அதேபோல் நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை நீக்கிவிட்டோமானால், நம்மில் ஒரு சிறந்த மனிதனைக் காணலாம்" எனக் கூறினார்.

(அ)சைவம்

அசைவம் சாப்பிடலாமா? இறை நம்பிக்கை உள்ளவர்கள்? அசைவம் சாப்பிடலாமா கூடாதா?

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது.

இதோ ஓஷோ அவர்களின் பதில்.

  • உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
  • உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
  • உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
  • உணவுக்கும் உடலுக்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.
  • உணவுக்கும் குணத்திற்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் மனித மனதிற்கும் சம்பந்தம் உண்டு.
  • மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு.

1. கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன் அதைக் கரைக்கவே மனித பிறவி.

2. தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவிகள் குறைவு மாமிச உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்.

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள் தாயின் மனம் மற்றும் அந்த குட்டியின் மனம் எவ்வாறு தேடி தவித்து இருக்கும்? அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான். அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்.

5. அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான் அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன் வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம் இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை?
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார் மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார் இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை கடன் வாங்கியவனே
கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால்.

7. காட்டில் கூட ஆடு, மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை. புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று அழைக்கிறோம். ஆக, சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. உடலால் மனித பிறவி சைவம். உயிரால் மனித பிறவி சைவம். குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9. ஆடு, மாடு, மான், யானை போன்றவை உடலால் சைவம் உயிரால் சைவம் மனதாலும் சைவம்.

ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது என்பதால் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.

இது ஓஷோ அவர்களின் விளக்கம். 

குந்தவை நாச்சியார் இஸ்லாத்து மாறினாரா?

இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் வலம் வருகின்றன.

நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காத போதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றி விடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவு..!

முதலில் இது பற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வு நூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.

1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.

2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.

3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.

4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.

5. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.

7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.

இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்து சென்றுள்ளார் ஆசிரியர்.

சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன…!

இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும்.

குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை…!

பொ.ஆ 1004 வரை தான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல் தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார்.

இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது. அது என்ன?

பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப் பணிகள் மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார்.

இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே!

வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மத மாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள் மீது காட்டியுள்ளார்.

ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே

-திருமந்திரம்.

12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததைத் திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இது கொடு மணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,

"கண்ணன் ஆதன்"

இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது.

அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்…!

அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்துள்ளார் என்பதைத் தான் "தம்மை" என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறதே அன்றி "தம்மை" என்றால் தனக்குத்தானே என்று பொருள் அல்ல.

இதை "தம் அம்மை" அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள் தான் அந்நூலில் இடம் பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை!

-பா இந்துவன்

படித்ததில் பிடித்தது!!

Wednesday, November 24, 2021

குரு தேஜ் பகதூர்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குருதேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று (24.11.1675)

தர்மத்தின் வழி நிற்பதா? இல்லை.. மரணத்தைத் தழுவுவதா? என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.

சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் நாள் அமிர்தசரஸ் நகரில் பிறந்தார். இயற்பெயர் தியாகாமால். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். அமிர்தசரஸ் நகரம் சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக இருந்தது.

சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரர், சிறந்த கவிஞர் மற்றும்  தத்துவ ஞானி. இவரது முயற்சியால் பல இடங்களில் குடிநீர் குளங்களும், லங்கர் எனப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களும் அமைக்கப்பட்டது. அனந்தபூர் சாஹிப் நகரத்தை உருவாக்கினார். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் இவர்  இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் உள்ளது.

ஹிந்து தர்மத்தை காப்பதற்காக சீக்கிய குருமார்கள் போராடினர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என முகலாயர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஔவுரங்கசீப் காலத்தில் காஷ்மீர் பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதமாற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர்  பண்டிதர்கள் அடைக்கலம் நாடினர்.

'நானும் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான், அந்த பிராமணர்களும்
மாறுவார்கள்', என்று ஒளரங்கசீப்புக்குத் தகவல் அனுப்பினார் பகதூர். அதனால் முகலாயப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்று இஸ்லாமியராக மாற வேண்டும் அல்லது மரணம். தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று பதிலளிக்க,  பகதூரின்  தலையை வெட்டி கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு தேஜ் பகதூரின் மகனும், சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடையவர்களாக சீக்கியர்களை உருவாக்கினார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர் பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடினர்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும், பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும்.

Tuesday, November 23, 2021

சும்மாவா வந்தது சுதந்திரம்

சுதந்திரம் கிடைத்த அன்று முதல் இன்று வரை நாம் கேட்டுக் கொண்டிருக்கிற ஒரு கானல் தகவல் - "காந்தியும் நேருவும் சுதந்திரம் வாங்கித் தந்தனர்". சுதந்திரம் என்ன கடைச் சரக்கா? வாங்கித் தருவதற்கு?

ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான தேசபக்தத் தியாகிகளின் ரத்தத்தைக் கொடுத்து அதன் இறுதியாக கிடைத்தது தான் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம். ஆயிரமாண்டுகள் வாராது வந்த மாமணியைத் தோற்போமோ என்றான் பாரதி. ஆம்! நாம் ஆயிரம் ஆண்டுகளாய் தொலைத்திருந்த அரிய மணி தான் நம்முடைய சுதந்திரம். 

மாபாரத யுத்தம் முடிந்தவுடன் பீஷ்மரிடம் ஞானம் வேண்டி நிற்கிறார் தருமர். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு தெளிவு பெறுகிறார். அவற்றில் ஒரு கேள்வியின் பதில் நமக்கு உபயோகமானது.

தருமர் - "ஒரு நாட்டை அழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?"

பீஷ்மர் - "ஒரு நாட்டை அழிக்க நமக்கு படை பலம், ஆயுத பலம் மட்டும் போதாது. அவற்றுக்கு முன்னால் இந்த விஷயங்களைச் செய்தால், படை ஆயுதம் இல்லாமலே நாம் ஒரு நாட்டை அழிக்க முடியும்"

  • முன்னோர்களின் தியாகத்தை மறக்கின்ற எந்த ஒரு தேசமும் அழியும்.
  • நமது முன்னோர்களின் மீது நம்பிக்கையும், பெருமையும், பற்றும் இல்லாத சமுதாயம் அழியும்.

இது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ நம்மை ஆள நினைத்த பரங்கிகளுக்கு (பிரிட்டீஷ்காரர்களுக்கு) புரிந்திருந்தது. நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் தியாகங்களை மறந்து, நமது முன்னோர்களின் பெருமைகளை குறைத்துப் பேசி நம்மை நாமே இழிவாக நினைத்துக் கொள்ளும்படியான தலைமுறையை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்.

வாஞ்சிநாதன் என்றொரு சுதந்திர போராளி இருந்தார், மணமாகி ஒரே வாரத்தில் தன் மனைவியை விட்டு விட்டு வந்தார். நம்முடைய மக்களைக் கொன்றொழித்துக் கொடுமைகள் செய்த கலெக்டர் ஆஷ் என்ற பரங்கியனைச் சுட்டுக் கொன்று தன் உயிரையும் தியாகம் செய்தார்.

அவர் தன்னுடைய வாழ்வை, குடும்பத்தைப் பற்றி சிந்திக்கவில்லை நாடும், நாட்டின் விடுதலையும் தான் முதன்மை என்று யோசித்தார்.

ஆனால், இன்று அவரை ஒரு ஜாதியின் பெயரைச் சொல்லி நிராகரிக்கும் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அவரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல்களும் அதற்கு ஆரவாரிக்கும் கூட்டமும் இங்கு உண்டு. என்ன ஒரு கேவலம்!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாபெரும் சுதந்திர போராட்டத் தலைவர், சிறந்த தேசபக்தர். தன்னுடைய சொத்து முழுவதும் பட்டியல் சமுதாய மக்களுக்குக்காகத் தந்தார். ஆனால் அவரையும் ஒரு ஜாதித் தலைவராக மாற்றி சிறுமைப் படுத்திவிட்டோம்.

காமராஜர், அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன் இப்படி பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராளிகளை நாம் அவர்கள் செய்த தியாகங்கள், வீரச் செயல்களை மறந்து ஜாதி என்னும் குடுவைக்குள் அடைத்து விட்டோம். அவர்கள் அந்தந்த சமுதாயத்திற்கு எவ்வளவு சொந்தமோ அதே அளவுக்கு நம் பாரத நாட்டிற்கும் சொந்தமானவர்கள்.

அன்று பரங்கியர் விதைத்த விஷ விதை, இன்று ஆலமரமாகி நம்முடைய நாட்டை பிரிக்க - மொழி, இனம், ஜாதி ரீதியாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மதத்தால் நாம் 1947ல் ஒரு முறை பிரிந்து விட்டோம், அதுவே நமக்கு ஆறாத ரணத்தைத் தந்திருக்கிறது. அதிலிருந்தும் நாம் இன்னும் பாடம் கற்க வில்லை என்பதே நம் இன்றைய நிலை.

நாம் அனைவரும் சோதரர்கள், அனைவருமே பாரத அன்னையின் புதல்வர்கள். நம்மில் பேதம் கிடையாது. இதை உரக்கச் சொல்வோம் உலகினுக்கு. சுதந்திரம் பெற்ற 75ம் ஆண்டில் நாம் இன்று இருக்கிறோம். இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தர போராடி தம் வாழ்விழந்து, சொத்திழந்து, அனைத்தையும் இழந்து தியாகம் செய்த தியாகிகளின் தியாகத்தை எண்ணிப் பார்ப்போம், போற்றுவோம்.

கத்தியின்றி, ரத்தமின்றி வந்ததல்ல சுதந்திரம். பலருன் உதிர அருவியால் பெறப்பட்டது நமது சுதந்திரம். இதனை உரிய முறையில் பேணிக் காப்பது நம் கடமை.

வந்தே மாதரம்!! வாழ்க பாரதம்!!!

நான் என்னும் அகங்காரம்

ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். அவருடைய சீடர்கள் எல்லோரும், ஒருவரை விட மற்றவர் அனைத்தும் கற்றவர்கள், என தலைக்கனம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

This image has an empty alt attribute; its file name is 20211123_2053128354020894675955857.jpg

குரு இவர்களின் தலைக்கனத்திற்கு பாடம் புகட்ட எண்ணினார். ஒரு நாள் அவர்களிடம், "உங்களில் யார் வைகுண்டம் செல்வார்கள்?" எனக் கேள்வி கேட்டார். உடனே ஒவ்வொருவரும் தான் அந்த தவறை செய்திருக்கிறேனே இந்த தவறை செய்திருக்கிறேனே, என நினைத்து எதுவும் பேசாமல் இருந்தார்கள்.

அதற்கு குரு, "உங்களில் ஒருவர் கூட வைகுண்டத்திற்கு செல்லப் போவதில்லையா?" எனக் கேட்டார். அனைவரும் மவுனமாக இருந்தனர். உடனே சீடர்களில் ஒருவன் குருவிடம், "நான் போனால் போகலாம்" என பதிலளித்தான்.

மற்றவர்கள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். அவனாலும் வைகுண்டம் செல்வேன் என்று உறுதியாக கூற முடியவில்லையே என மற்றவர்கள் அவனைக் கேலி செய்தனர்.

அதற்கு அந்த சீடன்," 'நான்' என்கிற அகந்தை போனால்தான், நாம் வைகுண்டம் செல்ல முடியும் என மிக தீர்க்கமாக பதிலளித்தான்.

குரு சீடர்களிடம்,"ஆம், 'நான்' என்னும் அகங்காரத்தை நீங்கள் மறக்கும் போது தான், மனிதப்பிறவியின் வெற்றி கிடைக்கும். அப்பொழுது தான் வைகுண்டம் செல்ல முடியும்" எனக் கூறினார்.

Sunday, November 21, 2021

முட்டாள்களிடம் எப்படி பேசுவது?

முன்னொரு காலத்தில் ஒரு ராஜா தன் மந்திரியிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் மனதில் ஒரு புதுமையான கேள்வி தோன்றியது. ராஜா உடனே மந்திரியிடம், "மந்திரியாரே! முட்டாள்களிடம் எப்படி பேசுவது?" என்று கேட்டார். திடீரென ராஜா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று எதிர்பாராத மந்திரி, "மன்னர் பெருமானே! இதற்கான பதிலை நாளை சொல்கிறேனே?" என்று முறையிட்டார்.

மறுநாள் காலை அந்த மந்திரி தன்னிடம் வேலை செய்யும் ஒருவனைக் கூப்பிட்டு, "நான் சொல்வது போல செய்தால் உனக்கு நூறு வெள்ளிக் காசுகள் தருகிறேன்" என்றார். அந்த வேலைக்காரனும் அமைச்சர் சொல்வது போல் செய்வதாக உறுதி கூறினான். உடனே மந்திரி அவனிடம், "உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்து சென்று உன்னை மன்னரிடம் அறிமுகம் செய்து வைப்பேன். அச்சமயம் மன்னர் உன்னிடம் சிலபல கேள்விகள் கேட்பார். நீ வாய் திறந்து பதில் எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும். சரியா? "மந்திரி வேலைக்காரனை அரசவைக்கு அழைத்து சென்றார்.

"மன்னர் மன்னா! இதோ இருக்கிறானே இவன் எனது உறவினன். மெத்தப் படித்தவன். தாங்கள் என்ன கேள்வி கேட்டாலும் இவனால் உடனடியாக பதில் கூற முடியும்" என்று அவனை மன்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் மன்னர் அவனை நோக்கி முந்தைய நாள் அமைச்சரிடம் கேட்ட அதே கேள்வியை, "முட்டாள்களிடம் சில நேரங்களில் பேச நேரிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?" மறுபடி கேட்டார்.

அந்த வேலைக்காரன் அமைச்சர் சொன்னபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். மன்னர் பலமுறை பல்வேறு விதத்தில் இதே கேள்வியை கேட்ட போதும் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. மன்னர் அமைச்சரை நோக்கி, "என்ன? உங்கள் உறவினன் பலமுறை கேட்டும் இதற்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறானே!!?? நீங்கள் சொன்னது போல் இவன் அறிவாளியாக இருப்பான் என்று தோன்றவில்லையே?" என்று சற்று கோபத்துடன் சொன்னார்.

அதற்கு அமைச்சர், "மன்னரே! தாங்கள் கேட்ட கேள்விக்கு தான் பதில் கூறிவிட்டானே!!" என்றார். "நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் சொன்னான். வாய் மூடி மௌனியாக அல்லவோ இருக்கிறான்?" என்றார் மன்னர். "அரசே! முட்டாள்களிடம் சில சமயங்களில் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தானே உங்கள் கேள்வி? அதற்கான விடையைத் தான் தன்னுடைய மௌனத்தின் மூலம் விடை கூறியுள்ளான்.

அதாவது, முட்டாள்களிடம் சில சமயங்களில் பேச நேரிட்டால், மௌனமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பேசாது வாய் மூடி மௌனமாக இருந்தான்" என்றார் அமைச்சர். முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னை குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் பற்றி பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற இயலாது. ஆகையால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது என்பதை உணர்த்திய அமைச்சரை பாராட்டினார் மன்னர். யோசித்து செயலாற்றினால் செயல்களில் வெற்றி காணலாம்.

முட்டாள்களிடம் வாதிடாதீர்கள், அவர்கள் உங்களை அவர்கள் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

மௌனம்..

ஒரு குதிரையில் வெளியூர் சென்று கொண்டு இருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுத்து செல்லலாம் என்று எண்ணி குதிரையை விட்டு இறங்கி குதிரையை அருகில ஒரு மரத்தில் கட்டினான்.

குதிரை உண்பதற்கு புல் போட்டு விட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான். அப்போது அங்கிருந்த ஒரு குறும்புக்கார இளைஞன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான். இதைப் பார்த்த அந்த வழிப்போக்கன், "தம்பி, இது முரட்டு குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே. அது உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான்.

அந்த இளைஞன் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் மீண்டும் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான். குதிரையால் வலியைப் பொறுக்க முடியவில்லை விட்டது ஒரேயொரு உதை. அந்த இளைஞன் நாலைந்து குட்டிக்கரணம் போட்டு சிறிது தொலைவில் விழுந்தான். முன் பற்கள் விழுந்ததோடு மட்டுமின்றி நல்ல காயமும் அவனுக்கு ஏற்பட்டது. "இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா?" என்று கூச்சலிட்டான். அங்கே கூட்டம் கூடிவிட்டது.

"என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அந்த வந்தேறியான குதிரையின் சொந்தக்காரன் தான்" என்றான். தனக்கு இழப்பு தொகையோ அல்லது அந்த குதிரை உரிமையாளனுக்கு தண்டனையோ தர வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். வழக்கு தொடங்கியது.

குதிரை சொந்தக்காரனைப் பார்த்து நீதிபதி, "இந்த முரட்டுக் குதிரை உன்னுடையது தானா?" என்று கேட்டார். ஆனால் அவனோ பதில் ஏதும் சொல்லவில்லை. "உன் குதிரையால் தான் இவனுக்கு இவ்வளவு காயம் ஏற்பட்டது. இதற்கு என்ன சொல்கிறாய்?" என்று மீண்டும் கேட்டார் நீதிபதி. இப்போதும் ஒன்றும் சொல்லவில்லை அவன். மௌனமாக இருந்தான்.

இதைக் கண்ட நீதிபதி, "இவன் ஒரு செவிட்டு ஊமை போல இருக்கிறான். என்ன கேட்டாலும் பதில் பேசாமல் இருக்கிறானே" என்றார். உடனே வழக்கு தொடுத்த அந்த இளைஞன், "என்ன வாயிலே கொழுக்கட்டையா வச்சு இருக்கே? இது முரட்டு குதிரை… வாலைப் பிடித்து இழுக்காதே… குதிரை உதைத்தால் பல்லெல்லாம் போய்விடும்னு அப்போ த்தினாயே? இப்போது வந்து செவிட்டு ஊமை போல நடித்து ஏமாற்றவா பார்க்கிறாய்?" என்று கோபத்துடன் கத்தினான்.

இதைக் கேட்டதும் நீதிபதிக்கு உண்மை புரிந்தது. வழக்கு தொடுத்தவனைப் பார்த்து, "அவர் எச்சரிக்கை செய்த பின்னும் அந்த குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தாயா?" என்று கேட்டார். அவன் தலை கவிழ்ந்து நின்றான். குதிரையின் சொந்தக்காரன், "நீதிபதி அவர்களே! தங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே ஊமை போல நடித்தேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்றான். வழக்கு தொடுத்தவனைக் கடுமையாக கண்டித்து அனுப்பிய நீதிபதி குதிரை சொந்தக்காரனின் அறிவு கூர்மையை பாராட்டினார்.

இந்த கதை சொல்லும் கருத்து:
"உண்மையை சத்தமாகச் சொல்லி வெளியே கொண்டு வருவதை விட, சில நேரங்களில் மௌனம் கூட உண்மைக்கு வழி வகுக்கும்."
"பேசும் நேரத்தை போல பேசாத நேரத்திலும் சற்று யோசிப்போமா??"

Friday, November 19, 2021

சாபம்

 "எப்படி என் சந்ததிகள் முற்றிலும் அழிந்ததோ,அதேபோல் உன் வ்ருஷ்ணி குலமும் சர்வநாசம் அடையும்", கிருஷ்ணனை சபித்த காந்தாரி, தன் அந்தப்புரத்துக்குத் திரும்பினாள். தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்கு, தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.

எனினும், அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும்போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத்தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள். திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள். கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின.

கோபம் மீண்டும் கொப்பளிக்க, "எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?"

"காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்! பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது. அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. முதலில் என் கேள்விக்கு பதில்சொல்.

"ஏன் நீ உன் கணவனை சபிக்கவில்லை? அவர் நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது. பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப் பாசம் அல்லவா? நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு. ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை, நீ ஒரு கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா? பிறகு பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின் தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே?

மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் எனும் போர்வையில், துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களை சபிக்க முடியாது என்ற எண்ணமோ? உன் மகன், தன் சகோதர்களையே அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே, 'மடியில் வந்து அமர்வாய்' என விளித்து மாபாதகம் செய்தானே?

மேலும், 'ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:' என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன், தன் சுயநலத்திற்காக அவர்களை பலிகொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை? பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கேப் போனது? ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன் தான் உண்மையில் உடன் பிறந்தவள் குடும்பத்தை, கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன்" எனக்கேட்டார் பகவான்.

"கிருஷ்ணா, சகுனி என் சகோதரன். நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?" என்றாள். "பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல, பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு சொந்தமில்லையா?"

"கபடனே! குந்தி உன் சொந்த அத்தை.அதனால்தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்"
"பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு. சரி அதைவிடு காந்தாரி. பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால், உனக்கு மகிழ்ச்சிதானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ, அதை துரியோதனாதிகளைச் செய்யவிட்டாயே?"

"கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்கவேண்டும் என நினைப்பது தவறா?""அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ. எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்", என்றார் பரமாத்மா.

என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏனென எண்ணிப்பார். நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன். கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள் பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன். இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை. மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து, வானரர் உதவியோடு இராவணனை அழிக்க, நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன்.

ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை. போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாகஅமைந்திருக்கும்? மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து, பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?"

"எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?" "அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. "உன் மகன் தான், நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன் திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை."

"கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?""காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்"

"பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?" "ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும், அது மிக மிகக் கொடுமையான பாவம்"."கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து, கானகம் நோக்கி செல்வேன்".

இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது எழுந்து நடந்தாள்.

வெளியே! கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.

படித்ததில் பிடித்தது!!

Thursday, November 18, 2021

நம்பிக்கை!!

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்" என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றார் அவர்.

"50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

"அப்படியா, நான் யார் தெரியுமா ?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரைச் சொன்னார்.

அசந்து போனார் இவர்…

"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார்.

ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார்.

"நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் எதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கப்பட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஒத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்சு செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியாக 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக்கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார்.

சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.

சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்

இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

அன்பு நண்பர்களே ..

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும் அப்போது தான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

"வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு." என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!!

சீதையும் பூமிக்குள் மறைந்து லக்‌ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள் என்பதே அது.

‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பது நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை’ என முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும் பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். 

அவர்கள் இருவரும் நேரே தேரில் சரயு நதிக்கரைக்குச் சென்றனர். நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும் இல்லை. அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள்.

பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள் மெல்ல நடந்தார்கள். பரதன், சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். 

சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத்தொடங்கியது. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டதை உணர்ந்த மக்கள் “ராமா ராமா” என உணர்ச்சிப் பொங்க உரக்க கத்தினார்கள். ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது. 

ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு கேட்டாள், “தந்தையே ! ஸ்ரீராமர் நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரிந்துவிட்டாரே, இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே. உங்களுக்கு வருத்தமாக இல்லையா?” 

ஜனகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவல் இழையோடியது. மாண்டவி, சுருதகீர்த்தி இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தார்கள். 

ஜனகர் சாந்தம் தவழும் முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்கச் சொன்னார், “மனித உடல் என்பது உறை, ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத் தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன் கையில் வைத்துக் கொள்கிறது. வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள்.

தாங்கள் வந்த கடமை முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டு அதனால் தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்படவில்லை. 

இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம்.”சுனயனா வியப்போடு கேட்டாள், ‘அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா? என் செல்ல வளர்ப்பு மகள் தெய்வமேதானா?’
‘ஆமாம். ஒன்றை யோசி. அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும்? மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று விட்டன. 

ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும்.’ ‘இதெல்லாம் உண்மைதானா? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா?’ ‘சாட்சி என்ன, என் தெய்வம் ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காட்டுகிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள்!’ 

ஜனகர் ஒரு கட்டளைபோல் இந்த வாக்கியத்தை கூறினார். பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென
மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள். எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. லட்சுமணன் உடல் ஒரு கனத்தில் ஆதி சேஷனாக மாறியது. 

ராமன் திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள். ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக விண்மகளானாள். அவள் திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள். மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன. 

மக்களனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ‘ஜெய் ஸ்ரீராம்‘ என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன.

ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்றறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன. அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள். ராஜரிஷி ஜனகரின் மனம் ‘ராம ராம’ என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!!

படித்ததில் பிடித்தது

Sunday, November 14, 2021

எது நிலையானது?

நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டார் பண்ணையார் ஒருவர். அவர்களில் நான்காவது மனைவி மீது தான் ஆசை வைத்திருந்தார். எப்போதும் அவள் அக்கறையுடன் இருப்பார். 

மூன்றாவது மனைவியையும் அவருக்கு பிடிக்கும். ஆனால் அவரை வெளியாட்களிடம் அறிமுகப்படுத்தவும் மாட்டார். போருடனும் போய் விடுவாளோ என்ற பயம் கூட உண்டு.

இரண்டாவது மனைவியிடம் ஏதாவது பிரச்னை வந்தால் மட்டும் சொல்வார். அவளும் அதை தன் பிரச்சினையாகக் கருதி தீர்த்து வைக்க முயற்சிப்பாள்.

முதல் மனைவியைக் கண்டாலே அவருக்கு பிடிக்காது. பார்க்கவும் விரும்ப மாட்டார். இப்படி வாழ்ந்த பண்ணையாருக்கு வயதாகி விட்டது. மரண படுக்கையில் கிடந்தார். அப்போது மனைவிகளிடம், "உங்களுக்குள் என் மீது அன்பு கொண்டவள் யார். சாகும் போது என்னுடன் வரத் தயாராக இருப்பது யார்" எனக் கேட்டார்.

நான்காவது மனைவி, "இவ்வளவு காலம் உங்களுடன் இருந்ததே அதிகம்" என்று சொல்லி கையை விரித்தாள்.

மூன்றாவது மனைவி, “உங்களுடன் நான் ஏன் வரவேண்டும், எனக்கு இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கிறது" என்று நகர்ந்தாள்.

இரண்டாவது மனைவியோ, "என்னால் வர முடியாது. வேண்டுமானால் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்யும் வரை இருக்கிறேன்" என்றாள்.

அதைக் கேட்டு அழுதார் பண்ணையார். அப்போது முதல் மனைவி, "நான் உங்களுடன் வரத் தயார். மரணத்திற்கு பிறகும் உங்களுடன் தான் இருப்பேன்" என்றாள்.

மனைவியை நிமிர்ந்து பார்த்த அவருக்கு அழுகை பீறிட்டது. காரணம் அவள் மிக மெலிந்திருந்தாள். இவ்வளவு காலமாக இவளை புறக்கணித்து விட்டேனே என்ற கவலையுடன் உயிரை விட்டார்.

இந்த பண்ணையாரைப் போலவே நம் அனைவருக்குமே நான்கு மனைவிகள் இருக்கிறார்கள். நான்காவது மனைவி தான் நம் உடல். அதை அழகுபடுத்திக் காட்ட என்னென்னவோ முயற்சிகளில் ஈடுபடுகிறோம். ஆனால் அது மரணத்திற்குப் பின் நம்முடன் வருவதில்லை. மயானத்தில் எரிக்கப்பட்டு சாம்பலாகி விடும்.

மூன்றாவது மனைவி தான் நாம் சேர்த்த பணம், சொத்துக்கள். அவற்றை மறைக்கவே விரும்புகிறோம். மற்றவர்கள் அபகரித்து விடுவார்களோ என்ற பயம். ஆனால் அவை நம் காலத்திற்குப் பிறகு மற்றவருக்கு உரியதாகும்.

இரண்டாவது மனைவி தான் குடும்பம், உறவினர்கள். அவர்கள் இறுதி பயணத்துடன் நம்மை விட்டு விலகிச் செல்வர்.

முதல் மனைவியே நம் ஆன்மா. இதுவே கடைசிவரை நம்முடன் இருக்கும். ஆனால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. ஒழுக்கக்குறைவு, தீயப் பழக்கங்களால் ஆன்மாவை சித்திரவதை செய்து பாவச்சுமைக்கு ஆளாகிறோம். நலமுடன் வாழ வேண்டிய அவள் நம்மால் நலிவடைகிறாள்.

ஆன்மாவை வலுவாக வைத்திருங்கள். தவறு எனத் தெரிந்தே செய்யும் செயல்களால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு முதல் மனைவியான ஆன்மா பலத்தை இழக்கிறது.

ஆன்மபலம் கொண்டவர்கள் மரணத்தைக் கண்டும் அஞ்ச மாட்டார்கள். மற்ற மூன்று மனைவிகளிடம் கிடைப்பவை எல்லாம் தற்காலிக இன்பமே. முதல் மனைவியான ஆன்மா மட்டுமே நிலையான மகிழ்ச்சியைத் தரும்.

நவகிரகங்களும் அதிபதிகளும்

தெய்வங்களின் குணமே கிரஹங்களின் குணம்!


சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக உள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.


சூரியன் – சிவன்

பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். 

அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.


சந்திரன் – பார்வதி

பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும். இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் – நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.


செவ்வாய் - சுப்ரமண்யர்

ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.

வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி.

அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.


புதன் - விஷ்ணு

ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது.

எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.


குரு - பிரம்மா, தட்சிணாமூர்த்தி

ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.


சுக்ரன் - லக்ஷ்மி, இந்திரன்

ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம்.

ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.


சனி - எமன்,சாஸ்தா

உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்டது.

ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).


ராகு - காளி, துர்கை

கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது.

ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.


கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும்.

நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

எறும்புகளும் மனிதர்களும்!!

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,

"ஒவ்வொரு நாளும் தயாரிக்கின்ற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.

கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.


இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே, ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார். அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.

"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,

பரமஹம்சர் சொன்னார், "எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கின்ற அற்ப சந்தோஷத்திற்காக மயங்கி, முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்.”

Thursday, November 11, 2021

கீழ்வெண்மணி போராளிகள்

திராவிடப் பண்ணையார்களை எதிர்த்து தேவேந்திரகுல வேளாளர்கள் போராடினார்கள். கம்யூனிஸ்ட்கள் உள்ளே புகுந்து கலகமாக ஆக்கினார்கள்.

கீழ்வெண்மணிப் படுகொலை நாளில் அத்தனை கம்யூனிஸ்ட்களும் ஓடித் தப்பித்திருக்க அப்பாவி தேவேந்திரகுல வேளாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கொலைவெறித் தாக்குதலை முன்னெடுத்த நாயுடுவுக்கு ஆதரவாக நின்ற ஈ.வெ.ரா, கம்யுனிஸ்ட்களின் அராஜகப் போராட்டங்களை விமர்சித்தார்.

அண்ணாத்துரையால் ஆரம்பிக்கப்பட்டு கருணாநிதியால் கைப்பற்றப்பட்ட திமுக அரசு, சொந்தமாகக் காரெல்லாம் வைத்திருக்கும் அந்தப் பண்ணையார்கள் கொலை செய்திருக்கமாட்டார்கள் என்று சொல்லி விடுதலை செய்தது.

அந்தப் பண்ணையாரைக் கொன்றால் எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும் என்று ஒருவன் புறப்பட்டுச் சென்று வெட்டிக் கொன்றான்.

ஒரே ஒருவர் மட்டுமே உழவுத் தொழிலில் ஈடுபடும் மண்ணின் மைந்தர்களின் வேதனையைப் புரிந்துகொண்டிருந்தார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர்

அரசிடம் சென்று கூலி விவசாயிகளின் பேரில் கடனுதவி கேட்டார். கிடைத்த பணத்தை வைத்து நீர் வளம் கொண்ட நிலங்களை வாங்கி அவர்களின் பெயரிலேயே பதிவு செய்தார். நாலைந்து வருடங்கள் அரும்பாடு பட்டு உழைத்து அந்தக் கூலி விவசாயிகள் கடனை அடைத்து நிலத்தைச் சொந்தமாக்கிக் கொண்டனர்.

அரைப்படி நெல் கூடுதலாகத் தரும்படி அடாவடியாகக் கேட்ட கம்யூனிஸம் அழிவைக் கொண்டுவந்தது.

கம்யூனிஸ்ட் கொடி ஏற்றியதால் திராவிடப் பண்ணையார்கள் ஆத்திரமுற்று அராஜகத்தை அவிழ்த்துவிட்டனர்.

காந்தியவாதத்துடன் கடனுதவியையும் கலந்து உழுபவருக்கே நிலத்தை ஒரு சில வருடங்களில் சொந்தமாக்கிக் காட்டினார்.

ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் அல்ல; ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தை உழைப்பாளர்களுக்கு ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் கிடைக்க வழி செய்தார்.

கீழ்வெண்மணி படுகொலையைச் செய்த பண்ணையாரை ஒருவன், நீண்டகாலமாகத் திட்டமிட்டு, ஆற அமரக் கொல்வதற்கு முன்பே அத்தனை கூலி விவசாயிகளுக்கும் அந்த நிலமே சொந்தமாகிவிட்டிருந்தன.

இந்த சாதனையைச் செய்துகாட்டியவர்கள் கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன் தம்பதி.

இவர்களைப் போன்ற உண்மையான போராளிகளை மதித்துப் போற்றும் மத்திய பாஜக அரசுக்கு மனப்பூர்வமான நன்றிகள். இந்த ஆண்டு அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

பதிவு :  B. R. Mahadevan

Wednesday, November 10, 2021

டி.எம்.சி என்றால் என்ன?

ஒரு டிஎம்சி என்றால் எவ்வளவு நீர்?

மழைக் காலங்களிலும், தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களிலும் டிஎம்சி (TMC) என்ற வார்த்தை சரளமாக பயன்படுத்தப் படுவதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம் காவிரியில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுள்ளார்கள், அணையில் இருந்து இவ்வளவு டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்படுகிறது

குடிநீருக்காக இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பது குறித்தும் அவ்வப்போத கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், டிஎம்சி என்றால் என்ன?ஒரு டிஎம்சி என்பது எத்தனை லிட்டர் தண்ணீர் என்பது பாமரர்கள் உள்பட படித்த மேதாவிகள் வரை பலருக்கு தெரியாத நிலையே இன்றளவும் நீடித்து வருகிறது.

டிஎம்சி (TMC) என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் என்பதன் சுறுக்கமாகும் (Thousand million cubic). அதாவது ஒரு டிஎம்சி நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். இதைத்தான் சுருக்கமாக டிஎம்சி என்று கூறி வருகிறோம்.1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீருக்கு சமம். அப்படியானால் 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர்.

ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க வேண்டுமென்றால் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். அதுபோல ஒரு டி.எம்.சி தண்ணீரை 1லிட்டர் பாட்டிலில் போட்டு ₹20 என்று விற்பனை செய்தால், ஏறக்குறைய ₹56 கோடிக்கு விற்பனை செய்யலாம். அப்படியானால் கற்பனை செய்து பாருங்கள் மக்களே மலைக்க வைக்கிறதா?

விநாடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. ஒரு டிஎம்சி நீரைக் கொண்டு பல ஏரிகளை நிரப்பலாம். 12 டிஎம்சி நீரைக் கொண்டு சென்னைக்கு ஓராண்டுக்குக் குடிநீர் வழங்க முடியும்.

தமிழகத்தில் உள்ள மேட்டூர் ஆணை சுமார் 1,700 மீட்டர் நீளம் கொண்டது. இந்த அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும். தமிழகத்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.



காவிரியில் உள்ள வேறு அணைகளான ஹேமாவதி, ஹாரங்கி இரண்டும் நிரம்பினால் அந்த நீர் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும். ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் வந்து அதன் மூலமே தமிழகத்திற்கு வரும். இதில், கபினி அணை 15.67 டிஎம்சியும், ஹேமாவதி 35.76 டிஎம்சியும், ஹாரங்கி அணை 8.07 டிஎம்சியும் கொள்ளளவு கொண்டது.

கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05 டிஎம்சி தண்ணீர். ஆக மொத்தம் கர்நாடகாவில் காவிரி பாசன அணைகளில் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். கர்நாடகாவில் திறந்து விடப்படும் காவிரி நீர் முழுவதையும் தாங்கி நிற்கும் அணையாக மேட்டூர் உள்ளது.

தற்போதைய மழைக்காலங்களில் நாம் எவ்வளவு டிஎம்சி தண்ணீரை வீணாக்கி வருகிறோம்? எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது? இதுகுறித்து நாம் என்றைக்காவது சிந்தித்தோமோ?சிதித்தால் தலைச்சுற்றி விடும் என்பதே உண்மை ஆண்டுக்கு 100 TMC முதல் 400 TMC மழைநீர் கடலில் கலக்கிறது.

இனிமேலாவது மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நாம் எந்தவித முயற்சியும் மேற்கொள்வோம். மழை நீர் சேகரிப்பை அமல்படுத்துவோம் மீண்டும் குடிநீர் பற்றாக்குறையின் போது தண்ணீர்! தண்ணீர்!! என்று அல்லாடுவதை தவிர்ப்போம்.

அரசை குறை கூறுவதை தவிர்த்து, நாமே களத்தில் இறங்கி எதிர்காலத்தை வளமாக மாற்றுவோம்.

திருச்செந்தூர் முருகன் பற்றிய அறிய தகவல் 60

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்.

திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.



  1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
  2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.
  3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
  4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
  5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.
  6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
  7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
  8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
  9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 
  10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
  11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
  12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன. 
  13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
  14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். 
  15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
  16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. 
  17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
  18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
  19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.
  20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.
  21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
  22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.
  23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.
  24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன
  25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களைஅழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
  26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
  27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.
  28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
  29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
  30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.
  31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.
  32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.
  33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்படஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.
  34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.
  35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.
  36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
  37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.
  38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.
  39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.
  40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.
  41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது. 
  42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.
  43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.
  44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
  45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.
  46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.
  47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.
  48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா?சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.
  49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
  50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.
  51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.
  52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.
  53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.
  54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.
  55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.
  56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.
  57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.
  58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.
  59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.
  60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திடுவார். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ். அன்பே சிவம். சிவாயநம!!