Saturday, July 11, 2020

மகாபாரதம் பகுதி 12

சந்தனுவின் திருமணம்


உடனே தேவவிரதனின் வார்த்தையை கேட்ட அந்த மீனவத் தலைவன், "இளவரசரே! தாங்கள் வேண்டும் என்றால் அரியணையை விட்டுத் தரலாம். ஆனால், உங்களுக்குப் பிறக்கும் மக்கள் விட்டுத் தருவார்களா?" என்றான்.

அதனைக் கேட்ட தேவவிரதன்," இவ்வளவு தானே உங்கள் பிரச்சனை. அப்போது எனில் கேளுங்கள். வானகமே! மண்ணகமே! கதிரவனே! காற்றே! மும்மூர்த்திகளே! முப்பது முக்கோடி தேவர்களே! கேளுங்கள். நான் கங்கா புத்திரன் தேவவிரதன் இன்று சபதம் மேற்கொள்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் நான் திருமணமே செய்து கொள்ளாமல், பிரம்மச்சாரியாகவே இருப்பேன். அத்துடன் அஸ்தினாபுரத்தை ஆளும் அரசனுக்குப் பாதுகாவலனாய் இருப்பேன். இது எனது தாய் கங்கா தேவியின் மீது ஆணை"  என்று உணர்ச்சி பொங்கச் சபதம் செய்தான் அவன்.

தேவவிரதன் அவ்வாறு சபதம் செய்த மாத்திரத்தில் வானத்தில் எட்டுத் திசைகளிலும் மேகங்களே இல்லாமல் மின்னலுடன் பலத்த இடி முழக்கம் ஏற்பட்டது. அக்கணம் வானவர்கள் தோன்றி தேவவிரதனின் மீது பூ மழையை பொழிந்தார்கள். அப்போது, வானத்தில் எல்லாத் திசைகளில் இருந்தும் பீஷ்மன் என்ற ஒலி எழுந்தது. "பீஷ்மன்" என்றால் "செயற்கரிய செயலைச் செய்தவன்" என்று பொருள். தனது தந்தைக்காக எந்த மகனும் செய்யத் தயங்கும் தியாகத்தை அன்று தேவவிரதன் தயங்காமல் செய்ததால், அந்த நாள் முதற்கொண்டு அவன் பீஷ்மன் என்று அழைக்கப்பட்டான்.

தனது மகன் செய்த சபதத்தை கேள்விப்பட்டு நெகிழ்ந்தான் சந்தனு. உடனே அவன் பீஷ்மனை அழைத்தான். தந்தையின் அழைப்பை ஏற்று பீஷ்மனும் விரைந்து வந்தான். 

அப்போது பீஷ்மனிடம் சந்தனு, "மகனே! நான் சந்திர குலத்தில் பிறந்தவன். இது வரையில் எத்தனையோ தவங்களை செய்து சித்தி பெற்றவன் நான். இன்று அந்த தவத்தின் பயனைக் கொண்டு உனக்கு ஒரு வரம் தருகிறேன். கேள்! நீ எப்பொழுது விரும்புகிறாயோ அப்பொழுது தான் உனது உயிர் நீங்கும்" என்றான். 

பிறகு ஒரு நல்ல முகூர்த்த நாளில் சந்தனுவுக்கும், சத்தியவதிக்கும் திருமணம் நடந்தது. அவர்களது திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது. அதன் பயனாய் அவர்களுக்கு சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

- தொடரும்

No comments:

Post a Comment