Saturday, July 4, 2020

மகாபாரதம் பகுதி 5

கங்கையின் நிபந்தனை


அப்போது ஒரு நாள் கங்கையும், சந்தனுவும் சந்தித்தனர். கங்கை, தன்னை யார் என்று சந்தனுவிடம் அறிமுகம் செய்து கொண்டாள். அத்துடன் அவள் பிரதீபனை முன்பு சந்தித்த விவரத்தையும் சந்தனுவிடம் எடுத்துக் கூறினாள். 

கங்கையை, பார்த்த மாத்திரத்திலேயே அவளது அழகில் மயங்கினான் சந்தனு. அத்துடன் அவனாகவே வாய் மலர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கங்கையிடம் வேண்டினான். 

சந்தனுவின் விருப்பத்தை அறிந்த கங்கை," ஐயனே! நான் தங்களை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை" என்றாள். 

அப்போது சந்தனு அவள் மீது கொண்ட அதீத மோகத்தால், "பெண்ணே! உன் நிபந்தனையை முதலில் சொல்!" என்றான் .

கங்கையின் கரம்பற்றும் சந்தனு
உடனே கங்கை சந்தனுவிடம், "ஆரிய புத்திரரே! நமக்குத் திருமணம் ஆன பிறகு, நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் தாங்கள் கேட்கக் கூடாது, அப்படித் தாங்கள் கேட்டால் உடனே நான் போய்விடுவேன். நமது திருமண வாழ்க்கையும் அத்துடனே முடிந்து விடும். இதுவே எனது நிபந்தனை" என்றாள். 

கங்கை மீது காம வயப்பட்டிருந்த சந்தனு மறுமொழி ஏதும் சொல்லாமல், ”இவள் பெரிதாக என்ன செய்து விடப் போகிறாள்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அவளது  நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். உடனே கங்கையும் திருமணத்துக்கு சம்மதிக்க, சந்தனு அவளது கரத்தை ஒரு அற்புதமான முகூர்த்த வேளையில் பற்றினான். 

அவ்விருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் காலடி எடுத்து வைத்தனர். அதனால், அஸ்த்தினாபுரமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

- தொடரும்

No comments:

Post a Comment