Sunday, July 12, 2020

மகாபாரதம் பகுதி 13

சித்திராங்கதனின் மரணம்


சித்திராங்கதன் நல்லவன், ஆனால் முன்கோபி. எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு சிறிய சிக்கலையும் பெரியதாக மாற்றும் இயல்பு கொண்டவன். மறுபுறம், விசித்திர வீரியன் ஒரு நோயாளி. அவனுக்கு எப்போதும் உடலில் ஏதேனும் உபாதை வந்து கொண்டே இருக்கும். தனது வாழ் நாளை பெரும்பாலும் மருத்துவக் கூடத்திலேயே அவன் கழித்தான். இந்தக் கவலை அரசர் சந்தனுவை வாட்டி வதைத்தது. 

அந்தக் கவலையிலேயே சந்தனு ஒரு நாள் மாண்டார். அப்போது இளவரசர்கள் இருவரும் சிறுவர்களாக இருந்தனர். அதனால், ஆட்சிப் பொறுப்பை பீஷ்மரே கவனித்து வந்தார். 

நாளடைவில் சித்திராங்கதன் வளர்ந்தான். பீஷ்மர் அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க நினைத்தார். சத்தியவதியும் அதற்கு சம்மதித்தாள். ஒரு சுப வேளையில் சித்திராங்கதனை அஸ்தினாபுரத்தின் அரசனாக முடிசூட்டிப் பிரகடனம் செய்து மகிழ்ந்தார் பீஷ்மர். சித்திராங்கதன் கோபக்காரனாக இருந்தாலும் நல்ல குணவானாக இருந்தான். எண்ணற்ற தான தருமங்களை செய்தான். 

சத்திய வழியில் நடந்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றான். அவனது புகழ் சுவர்க்கம் வரையில் பரவியது. இப்படி இருக்க சித்திராங்கதன் என்ற அதே பெயரில் ஒரு கந்தர்வன் வானுலகத்தில் வாழ்ந்து வந்தான். தனது பெயரிலேயே பூவுலகத்தில் ஒருவன் புகழ் பெற்று வாழ்ந்து வருவதை அறிந்தான் அவன். அதனால் பொறமை கொண்டான். 

அந்தப் பொறாமை கோபமாக மாறியது. நாளடைவில் அந்தப் கோபம் அவனுக்குப் பழி உணர்ச்சியாக வளர்ந்தது. அதனால், அஸ்த்தினாபுரத்தின் அரசனான அந்தச் சித்திராங்கதனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தான். அன்று முதல் சித்திராங்கதனை கண்காணிக்கத் தொடங்கினான் அந்த கந்தர்வன்.

அதற்குத் தகுந்தவாறே அஸ்த்தினாபுரத்து அரசனான சித்திராங்கதன் ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றான். இதுவே தான் எதிர்பார்த்த தக்க தருணம், என்று அப்போது அவனது வழியில் குறுக்கிட்ட அப்பொறாமை கொண்ட கந்தர்வன் அவனை வஞ்சகமாகக் கொன்றான். 

சித்திராங்கதனின் மரணத்தால் அஸ்த்தினாபுரமே சோகத்தில் ஆழ்ந்தது. மூத்தவன் இறந்து விட்டதால் இளையவனுக்கு முடி சூட்டலாம் என்று சிலர் கூறினர். ஆனால், விசித்திர வீரியன் சிறுவனாக இருந்ததால் அவன் வளரும் வரையில் மீண்டும் ஆட்சியை பீஷ்மர் கவனிக்கத் தொடங்கினார். 

காலங்கள் உருண்டோடியது. வசித்திர வீரியன் வளர்ந்தான். மீண்டும் தாய் சத்தியவதியின் ஆணைப் படி பீஷ்மர் விசித்திர வீரியனுக்கு அரச மகுடம் சூட்டி, அவனை அஸ்த்தினாபுரத்தின் அரசனாகப் பிரகடனம் செய்தார்.

ஆனால், அவனுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஒன்றன் பின், ஒன்றாக வந்ததால் பீஷ்மரே ஆட்சிப் பொறுப்பை அவனது பெயரில் நடத்தி வந்தார். இந்நிலையில், ராஜமாதா சத்தியவதி, விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்ய நினைத்தாள். அதன் பொருட்டு பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் பல நாட்டு அரசர்களுக்கும் பெண் கேட்டு ஓலை அனுப்பினாள். 

ஆனால், விசித்திர வீரியனின் உடல் நிலையை அறிந்த அனைத்து அரசர்களும் தங்கள் பெண்களை அவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்து வேகமாக தங்கள், தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்யத் தொடங்கினார்கள். அதே சமயத்தில் அந்த அரசர்களுக்கு பீஷ்மர் மீது பயம் இருந்ததால் வெளிப்படையாக அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் தங்கள் கருத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டனர்.

- தொடரும்

No comments:

Post a Comment