புத்தாண்டு என்பதை இரண்டு விதமாக நாம் வரையறுக்கலாம்.
ஒன்று : ஒரு நாள்காட்டியின் படி ஒரு புதிய ஆண்டின் தொடக்கம்.
இரண்டு : ஒரு புதிய தொடக்கத்தின் அல்லது மலர்ச்சியின் காலகட்டத்தை கொண்டாடுவது.
இப்பொழுது நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது நான் முன்னதாக சொன்ன புத்தாண்டை. நாம் பயன்படுத்தும் நாள்காட்டியின் படி ஜனவரி 1ம் தேதி ஒரு ஆண்டின் தொடக்கமாக ஏற்றுக் கொண்டு அதை புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். இது சரியா என்பது தான் என்னுடைய கேள்வி.
ஒரு விவாதத்துக்காக இந்த காலகட்டத்தின் பருவ நிலையையே எடுத்துக் கொள்வோம், இப்போது குளிர் காலம். இந்த காலகட்டத்தில் எல்லாமே சற்று உற்சாகம் குறைந்து தான் காணப்படும். மரம், செடி, கொடிகளிலிருந்து அத்தனை உயிரினங்களுமே தங்கள் இருப்பிடத்தை விட்டு வராமல் அல்லது மிகக் குறைவாகவே வெளிவரும். ஏனெனில் இந்த பருவத்தில் இந்த உலகிற்கு ஆதார சக்தியாக உள்ள சூரிய ஒளி மிகவும் குறைவான நேரமே கிடைக்கும்.
குளிர் காலம் |
பகல் குறைந்து இரவு அதிகமாக இருக்கும். மரம், செடி போன்ற தாவரங்கள் இலைகளை உதிர்த்து மொட்டையாக நிற்கும். புல் போன்ற வகைகள் மொத்தமாக கருகி மண்ணிற்கு அடியில் விதைகளை விட்டு விட்டு போய்விடும். இப்படி குளிர்காலம் என்பது ஒரு மந்தமான, வளர்ச்சி இல்லாத நிலையை சுட்டுவதாகவே இருக்கின்றது. திரைபடங்களில் சோகமான அல்லது அமானுஷ்யமான நிலையை எடுத்துக் காட்ட பனி நிறைந்த, இருள் அடர்ந்த ஒரு சித்திரத்தையே காட்டுவார்கள்.
மாறாக வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் எடுத்துக் காட்டாக சூரிய ஒளியின் வரவையும், அதை பார்த்து பறக்கும் பறவைகள், இலை துளிர்த்து பசுமையை பறைசாற்றும் மரங்கள், வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர் செடிகள். அதை சுற்றி வரும் பட்டாம்பூச்சிகள். அவற்றின் குறுங்கால்களால் மெல்லிய தென்றலில் பரவும் மலர்களின் மகரந்த வாசம். பூலோக சொர்க்கமாக மாற்றும் வசந்த காலத்தின் சித்திரம்.
வசந்த காலம் |
இப்படி பருவ நிலையே நேர்மறையான (பாஸிடிவ்) எண்ணங்களைத் தரும். இதை விடுத்து மந்தமான கதியில் இருக்கும் காலக் கட்டத்தை, வெறும் ஒரு நாள் காட்டியின் படி ஆண்டின் தொடக்கமாக கொள்வது என்ன விதமான அறிவியல் என எனக்கு புரியவில்லை.
நான் ஏதோ தமிழ் புத்தாண்டை முன்வைத்து இதை சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். மிகப் பழங்காலத்திலிருந்தே உலகில் எல்லா நாடுகளைச் சேர்ந்தோரும் தத்தம் பகுதியில் வசந்த காலத்தையோ அல்லது முதுவெணிற்காலத்தின் முற்பகுதியையோ தான் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடி இருக்கின்றனர்.
முட்டாள்கள் தினம் வந்த கதையைப் பார்த்தால் இதை நாம் புரிந்து கொள்ள இயலும். நாம் இன்று பின்பற்றும் ஆங்கில நாள்காட்டி முறையை பிரான்சில் அமல்படுத்தியபோது ஜனவரி ஒன்றாம் தேதியை ஆண்டின் தொடக்கமாக அறிவித்தார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் சிலர், பழைய முறைப்படி ஏப்ரல் மாத்திலேயே கொண்டாடினர். அவர்களை தூற்றவும், அவ்வாறு செய்வதை கேலி செய்யும் நோக்கத்திலும் ஆரம்பித்தது தான் முட்டாள்கள் தினம். ஆனால், எனக்கென்னவோ உலகமே முட்டாளாக்கப் பட்டதைத் தான் சூசகமாக முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது.
அடுத்து, இதை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?
1. இரவு 12 மணிக்கு கொண்டாட்டங்களை ஆரம்பித்து உறங்காமல் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இரவு முழுக்க உறங்காததால் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லிக் கொள்வதை உறங்கியே கழிக்கிறார்கள்.
2. மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு மது அருந்துகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவார்கள் என்பது வேதனைக்குறிய உண்மை.
வளர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டிய புத்தாண்டை போதையின் பாதையில் ஆரம்பிக்கின்றனர். இது சரியா?
நமது பண்பாட்டின்படி ஆண்டு தொடக்கத்தை (சித்திரை 1 அல்லது யுகாதி) எப்படிக் கொண்டாடுகிறோம்?
1. அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து இறைவனை வணங்குகிறோம் அல்லது கோவிலுக்கு செல்கிறோம்.
2. அந்த ஆண்டை சரியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பெரியோர்கள் ஆசி கோருவோம்.
3. கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு வகை பிரசாத்தை உண்போம் - வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டும் வரலாம் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும் என்பதற்காக தான் ஆண்டின் தொடக்க தினமான அன்று கசப்பும் இனிப்பும் சாப்பிடுகிறோம்.
இப்படி அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உள்ள நமது புத்தாண்டை விடுத்து வெறும் நாட்காட்டியின் அடிப்படையில் உள்ள ஒரு தினத்தை புத்தாண்டாக கொண்டாடுவது அறிவீனம் ஆகும்.