திருதிராஷ்டிரன் - பாண்டு - விதுரன் பிறப்பு
பராசரரும், யமுனையின் மறு கரையில் இறங்கி என்னை ஆசிர்வதித்துச் சென்றார். இப்போதோ எனது அந்த மகன் வியாசரை அழைக்க நினைக்கிறேன். அன்று நான் பராசரரின் தவத்தின் ஒளியால் எப்படி வியாசனை ஈன்றேனோ. அதே போல, எனது மருமகள்கள் வியாசன் இது வரையில் செய்த தவத்தின் பயனாய் மாவீரர்களை பிள்ளைகளாகப் பெறட்டும்" என்றாள் சத்தியவதி.
தாய் சத்தியவதியின் வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர் மிகவும் மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியுடனேயே ராஜ மாதா சத்தியவதியிடம்," தாயே! அப்படியே செய்யுங்கள்" என்றார்.
அக்கணம் தனது மகன் வியாசரை நினைத்தாள் சத்தியவதி. வியாசரும் தனது தாயின் சித்தப்படி சத்தியவதி நினைத்த மாத்திரத்தில் அங்கு வந்தார். அப்போது சத்தியவதி வியாசரிடம் கண்ணீர் மல்க மகனே," நீ இது வரையில் செய்த தவத்தின் பயனை எல்லாம் ஒன்று திரட்டி, எனது மருமகள்களுக்கு உனது திவ்விய திருஷ்டியால் ஒரு மகனைத் தா!" என்று வேண்டினாள்.
வியாசர் முதலில் தனது தாயான சத்தியவதியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். பிறகு சத்தியவதியின் கண்ணீரால் மனம் உருகி அவர் இறுதியில் அவள் வார்த்தைக்குக் கட்டுப் பட்டார்.
உடனே சத்தியவதி தனது இரண்டு மருமகள்களையும் அழைத்தாள். தனது எண்ணத்தை சொல்லி அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தாள். அவர்களும் ஒரு வழியாக ஒப்புக் கொண்டனர்.
நீண்ட தாடி மீசையுடன் அருவருப்பாகக் காட்சி அளித்தார் வியாசர். முதலில், தனி அறையில் வியாசரைக் காணச் சென்ற அம்பிகா தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள். அதனால், வியாசரின் பார்வையில் இருந்து வெளிப்பட்ட திவ்வியக் கதிர்கள் அம்பிகாவின் இரு கண்களைத் தவிர, அவளது உடல் முழுவதும் பரவிது. அடுத்து அம்பிகாவை தொடர்ந்து அம்பாலிகா வியாசரைக் காண அந்தத் தனி அறைக்குள் சென்றாள்.
தாடியும், மீசையும், ஜடாமுடியுமாக தோற்றமளித்த வியாசரைக் கண்ட மாத்திரத்தில் அம்பாலிகா அருவருத்துத் தனது உடலை புடவையால் மூடியபடி நடுங்கி இருந்தாள். அதனால், வியாசரின் கண்களில் இருந்து வெளிப்பட்ட திவ்வியக் கதிர்கள் அம்பாலிகாவின் உடல் முழுதும் பரவாமல் போனது.
இவ்வாறாக இச்சம்பவத்திற்குப் பிறகு தனது தாய் சத்தியவதியை காண வந்தார் வியாசர். அப்போது சத்தியவதி வியாசரிடம், "மூன்று காலங்களையும் நன்கு உணர்ந்தவன் நீ. சத்தியத்தை சொல் மகனே எனது பேரன்கள் எப்படி இருப்பார்கள்" என்று கேட்டாள்.
அதற்கு வியாசர் மறுமொழியாக தாய் சத்தியவதியிடம், "தாயே! எதிர் காலத்தைப் பற்றி இப்போதே ஏன் அறியத் துடிக்கின்றீர்கள்? இப்போதைக்குத்தாங்கள் நிகழ் காலத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள், எதிர் காலம் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும்" என்றார்.
அது கேட்ட சத்தியவதி, "வியாசன் தன்னிடம் இருந்து எதையோ மறைக்க முயற்சி செய்கிறான்! அதனால் தான் அவன் மழுப்புகிறான்" என்று தனக்குள் சிந்தித்தாள். பிறகு வியாசனிடம்," மகனே! நீ உனது தாயை மதிப்பது உண்மை என்றால், எனது பேரன்கள் பற்றிய சத்தியத்தை இப்போதே என்னிடம் சொல்" என்று கூறி கண்கலங்க வற்புறுத்தினாள்.
அக்கணம் வியாசர் தனது தாயிடம் வேறு வழி இன்றி சத்தியத்தை கூறத் தொடங்கினார்," தாயே! உமது மூத்த மருமகளான அம்பிகா என்னைக் கண்ட மாத்திரத்தில் தனது கண்களை மூடிக் கொண்டாள். அதனால், எனது திவ்விய ஒளி, அவளது கண்களை தவிர உடல் முழுதும் பரவியது. அதன் காரணாமாக அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தை பிறக்கும் போதே கண் பார்வை அற்ற குருடனாகப் பிறப்பான். ஆனால், அவன் லட்சம் யானைகளின் பலத்தைக் கொண்டு இருப்பான்.
மற்றும் உனது இரண்டாவது மருமகளான அம்பாலிகா என்னைக் கண்ட மாத்திரத்தில் அருவருப்புடன் தனது உடலைத், தனது வஸ்திரம் கொண்டு இருக மூடிக் காணப்பட்டாள். அதன் காரணமாக அவளுக்குப் பிறக்கும் குழந்தை கண் பார்வையுடன் இருப்பான், ஆனால் உடல் வெளுத்து, அற்ப ஆயுளைக் கொண்டு இருப்பான். எனினும், அவன் சாஸ்திரங்களை கற்று வாழ்நாளில் சத்தியவானாக இருப்பான்" என்றார்.
சத்தியவதிக்கு தனது மானசிக மைந்தனான வியாசன் கூறியதைக் கேட்ட மாத்திரத்தில் தலையே சுற்றியது. நடுக்கம் கொண்டாள். புலம்பித் தவித்தாள். அழுது துடித்தாள். எனினும், மீண்டும் நம்பிக்கை கொண்டு முயற்ச்சியில் இறங்கினாள். எனவே, மீண்டும் தனது மருமகள்களில் ஒருத்தியை வியாசனிடம் அனுப்ப பணிப்பெண் ஒருத்தியை பணித்தாள். அந்தப் பணிப்பெண்ணும் சத்தியவதியின் ஆணையை ஏற்று அம்பிகாவையும், அம்பாலிகாவையும் சென்று பார்த்தாள், அவர்களிடம் ராஜமாதா சத்தியவதியின் விருப்பத்தை சொன்னாள்.
அது கேட்டு திடுக்கிட்ட சத்தியவதியின் இரு மருமகள்களும் இம்முறை, வியாசனிடம் செல்ல விரும்பாமல் தனது ஆடைகளையும், நகைகளையும் கழற்றி செய்தி தாங்கி வந்த அப்பணிப் பெண்ணுக்கு அளித்து, அவளையே வியாசரிடம் செல்லுமாறு கூறினார்கள். அதன் படி அப்பணிப் பெண்ணும் அந்த இரு ராணிகளின் ஆணைக்குப் பயந்து, பணிந்து வியாசரை அந்தத் தனி அறைக்குச் சென்று பார்த்தாள். அப்பணிப் பெண் வியாசரைக் கண்ட மாத்திரத்தில் புன்னகை கொண்டு இயல்பாக காணப்பட்டாள்.
அப்போது வியாசரின் கண்களில் இருந்து புறப்பட்ட தவ ஒளி, அப்பணிப் பெண்ணின் உடல் முழுதும் தங்கு தடை இன்றிப் பரவியது. அதன் பிறகே, வியாசர் அவளை அடையாளம் கண்டு, "இது நமது தாயின் மருமகள்கள் அல்லவே!" என்று வியப்படைந்தார். அந்த வியப்புடனேயே, அவர் தனது தாயைக் காண மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.
சத்தியவதியும் வியாசனின் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டு இருந்தாள். அக்கணம் வந்த வியாசர் சத்தியவதியிடம், "தாயே இம்முறையும் உம்மை, உமது விதி முந்திக் கொண்டது. இப்போது என்னைக் காண அந்தத் தனி அறைக்கு வந்தது உமது மருமகள்களுள் ஒருத்தி அல்ல, உமது அரண்மனைப் பணிப் பெண். ஆனால், அவ்வாறு வந்த அப்பணிப் பெண் எந்த ஒரு அருவருப்பும் இன்றி என்னை நோக்கினாள். அதனால், எனது பார்வையில் இருந்து வெளிப்பட்ட திவ்விய ஒளியானது சீராக அவளது உடல் முழுதும் பரவியது. அதனால், அவள் எதிர்காலத்தில் நற்பண்புகளைக் கொண்ட ஒரு அழகான மகனைப் பெறப் போகிறாள்.
இனி மேல் தாயே, என்னை இது போன்ற முயற்ச்சியில் ஈடுபடுத்தாதீர். அத்துடன் தாயே, இது நாள் வரையில் நான் பெற்ற எனது தவ வலிமையையும் உமது பொருட்டு, நீ இட்ட பணியால் இழந்தேன். எனவே மீண்டும் நான் அந்தத் தவ வலிமையை பெற பல வருடங்கள் ஆகும். இப்போது எமக்கு விடை கொடுங்கள், நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
வியாசர் சென்றதும், தனது மருமகள்களை அவர்கள் செய்த காரியத்திற்காக கடிந்து கொண்டாள் சத்தியவதி. பிறகு நாட்கள் மெல்ல நகர்ந்தன. அம்பிகாவிற்க்குப் பார்வை அற்ற திருதராஷ்ட்ரன் மகனாகப் பிறந்தான். அம்பாலிகாவிற்குப் பாண்டு பிறந்தான். பணிப் பெண்ணிற்கு விதுரன் மகனாகப் பிறந்தான்.
பீஷ்மரே குருவாக இருந்து அவர்களுக்கு எல்லா விதமான போர்க் கலைகளையும், இராஜநீதியையும் கற்றுக் கொடுத்தார். மூவரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள்.
தோள் வலிமை நிறைந்தவனாக திருதராஷ்ட்ரன் விளங்கினான். வில்லாற்றளில் இணையற்ற வீரனாகப் பாண்டு விளங்கினான். நேர்மையானவனாக அறநெறிகளை நன்கு உணர்ந்தவனாக விதுரன் விளங்கினான்.
அது கண்டு இராஜ மாதா சத்யவதி பெருமை கொண்டாள்.