பீஷ்மர் செய்த பாவம்
அம்பையின் கையறு நிலை
மறுபக்கம், சால்வனை வென்ற பீஷ்மர் மீண்டும் தனது ரதத்தை அஸ்தினாபுரம் நோக்கிச் செலுத்தச் செய்தார். சில நேரத்தில் தனது அரண்மனையை அடைந்தார். தாய் சத்தியவதியிடம் தான் இழுத்து வந்த மூன்று இளவரசிகளையும் ஒப்படைத்தார்.
சத்தியவதி அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்று, விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தாள். அப்போது அந்த மூன்று இராஜகுமாரிகளில் மூத்தவளான அம்பா சத்தியவதியை நெருங்கினாள். அவளது பாதத்தில் விழுந்து வணங்கி இராஜமாதா, "நான் சௌபல நாட்டு அரசன் சால்வனை காதலிக்கிறேன். இருவருமே திருமணம் செய்து கொள்ள எண்ணம் கொண்டு இருந்தோம். ஆனால், உங்கள் மகன் பீஷ்மர், என்னை வலுக்கட்டாயமாக கடத்தி வந்து விட்டார். இது நியாயமா?" என்றாள்.
அது கேட்ட பீஷ்மர்," அம்பா, நீ சால்வனை பார்த்தபோதே இதனை என்னிடம் சொல்லி இருக்கலாமே! இப்போது இதனை சொல்கிறாயே?" என்றார்.
அதற்கு அம்பா மீண்டும் சத்தியவதியிடம், "தாயே! நான் பீஷ்மர் மீது கொண்ட பயத்தால் தான் அப்போது நான் சால்வனை காதலித்த விஷயத்தை அவரிடம் கூறாமல் உங்களிடம் இப்போது வந்து கூறினேன்" என்றாள்.
அதைக் கேட்ட சத்தியவதி, "வேறு ஒரு ஆடவனை மனதார நினைத்த பெண், இந்த அஸ்தினாபுரத்தின் மருமகளாக ஆகத் தகுதி அற்றவள். அதனால், நீ இப்போது செல், நீ விரும்புகின்றவனையே திருமணம் செய்து கொள்" என்று அவளை அனுப்பி வைத்தாள்.
அம்பா சால்வனைத் தேடி சௌபல நாட்டின் அரண்மனையை அடைந்தாள். அப்போது தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு அவனிடம் கூறினாள். அதற்கு சால்வன் அமைதியுடன் அவளை நோக்கினான்.
பிறகு அவளிடம், "அன்று போரில் நான் பீஷ்மரிடம் தோற்று விட்டேன். சத்திரிய அரசர்களின் தர்மப்படி தோற்ற பொருளை மீண்டும் பெறுவது அழகல்ல. அது பிட்சையை விடக் கேவலம். அதனால், நான் உன்னை இனி எனது மனைவியாக ஏற்றுக் கொள்ள இயலாது. நீ போய் விடு" என்றான்.
- தொடரும்

No comments:
Post a Comment