Sunday, July 5, 2020

மகாபாரதம் பகுதி 6

சந்தனுவின் சங்கடம்


சந்தனு கங்கையை மணந்து கொண்டு இனிதாக வாழ்க்கையை நடத்தினான். அவன் உண்மையில் கங்கையை பற்றிய ரகசியத்தை அறியாமல், அவளை ஒரு சாமான்யப் பெண் என்றே நினைத்து அவளுடன் வாழ்ந்தான். அவளும் கணவனுக்கு ஏற்ற நல்ல மனைவியாகத் தான் நடந்து கொண்டாள். இப்படியே காலங்கள் கடந்தன, அவ்விருவரது இல்லறத்தின் பயனாக கங்கைக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

அக்குழந்தை பிறந்த மாத்திரத்தில், அஸ்தினாபுரமே விழாக் கோலம் கொண்டது. அனைத்து கோயில்களிலும் அன்ன தானங்கள் நடந்தன. சந்தனு மிகவும் மகிழ்ந்தான். அதனால், அரண்மனையே குதுகலத்துடன் காணப்பட்டது. ஆனால், உண்மையில் சந்தனுவின் அந்த மகிழ்ச்சி கண நேரம் கூட நீடிக்க வில்லை.

ஆம்! கங்கை தனக்குப் பிறந்த குழந்தையை அரண்மனையில் உள்ள தாதியர்கள் உட்பட அனைவரும் பார்க்க தூக்கிச் சென்றாள். அப்படித் தூக்கிச் சென்றவள், அந்தப் பச்சிளம் குழந்தையை கங்கா நதியில் தூக்கி வீசிக் கொன்றாள். அதனைக் கேள்விப்பட்டு சந்தனு துடித்துப் போனான். கோபத்தால் அப்போது அவனது  கண்கள் சிவந்தன. தனது மனைவியான கங்கையை கடிந்து கொள்ளத் துடித்தான். ஆனால், முன்பு திருமணத்திற்கு முன்னாள் அவளுக்குத் தான் கொடுத்த அந்த வாக்கை சற்றே நினைத்துப் பார்த்து, அந்த வாக்கிற்கு கட்டுப் பட்டு அவனக்கு அப்போது இருந்த கோபத்திலும், துக்கத்திலும் கூட அமைதி காத்தான்.

இப்படி சோகத்தில் இருந்த சந்தனுவுக்கு, சில மாதங்களில் மீண்டும் கங்கை தாய்மை அடைந்து விட்டாள் என்ற நற்செய்தி வந்து சேர்ந்தது. அதனால் முதல் குழந்தை கொல்லப்பட்ட துக்கத்தை சற்றே மறந்து ஆனந்தம் கொண்டான். சில காலங்களில் கங்கை இன்னொரு அழகான ஆண் குழந்தையை ஈன்றாள். மீண்டும் அஸ்தினாபுரம் மகிழ்ச்சியால் கலை கட்டியது. ஆனால், இந்த முறையும் கங்கை அக்குழந்தையை, கங்கை நதியிலே வீசிக் கொன்றாள். அது கேள்விப்பட்டு, மீண்டும் சந்தனு கொதித்துப் போனான். ஆனாலும், முன்பு அவளுக்கு அவன் கொடுத்த வாக்கினால் கட்டுப் பட்டு செய்வதறியாமல் அமைதியாக இருந்தான். இப்படியே கங்கை தனக்கு வரிசையாகப் பிறந்த ஏழு குழந்தைகளையும், தனது இருப்பிடமான கங்கா நதியில் வீசிக் கொன்றாள்.

கங்கையைத் தடுக்கும் சந்தனு
ஒவ்வொன்றையும் கங்கை தூக்கிச் செல்லும் பொழுதும் சந்தனு துடித்துப் போவான். ஆனால், அமைதியாக அவன் முன்பு கொடுத்த வாக்கினால் கட்டுண்டு கிடப்பான். இப்படியே சந்தனு அமைதி காத்து இருந்த நிலையில் கங்கைக்கு எட்டாவது குழந்தையும் பிறந்தது. அதையும் கங்கை கொல்லத் தீர்மானித்து தனது இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டாள். இம்முறை பொறுமை இழந்தான் சந்தனு. அவளைத் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினான். கோபத் தீ, தனது கண்களில் வெளிப்பட கங்கையை நோக்கிப், "பெற்ற குழந்தைகளை இரக்கமே இல்லாமல் கொல்கிறாயே! நீயும் ஒரு தாயா? என்ன நடந்தாலும் சரி. இனி நான் இந்தக் குழந்தையை கொல்ல விட மாட்டேன்" என்று உறுதியுடன் சொன்னான்.

சந்தனுவின் அந்த வார்த்தைகளைக் கேட்ட கங்கை விதியை நினைத்தவளாக சிரித்தாள். பிறகு சந்தனுவிடம்,"எனக்குத் தந்த வாக்குறுதியை தாங்கள்  மீறி விட்டீர்கள். என்ன செய்ய? விதியை வெல்வதற்கு யாரால் தான் முடியும்? நீங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?" என்றாள்.

பிறகு மீண்டும் கங்கை சந்தனுவிடம்," அரசே! உம்மிடம் சத்தியத்தை சொல்லும் நேரம் வந்து விட்டது. உண்மையில் நான் யார் என்ற உண்மையைச் சொல்கிறேன். கேளுங்கள், எல்லோராலும் போற்றி வணங்கப்படும் கங்கா தேவி நான். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே உங்களுடன் வாழ்ந்தேன்" என்றாள் அவள்.

- தொடரும்

No comments:

Post a Comment