Friday, July 10, 2020

மகாபாரதம் பகுதி 11

தேவவிரதன் பீஷ்மர் ஆகுதல்


சூழ்ச்சி மற்றும் பேராசையின் மொத்த உருவமான அந்த மீனவத் தலைவன் ராஜா சந்தனுவின் வார்த்தையை கேட்டு சற்றே யோசித்தான். பிறகு சந்தனுவிடம்," ஏ ராஜன்! தெய்வத்தின் அருளால் எனக்குக் கிடைத்த அருமை மகள் அவள். நான் அவளை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை" என்றான். 

"உனது நிபந்தனை என்ன?" என்றான் சந்தனு.

மீனவத் தலைவன் தனது நிபந்தனையை கூறத் தொடங்கினான்," அரசே! எனது மகளுக்கு உம்மூலமாக பிறக்கும் பிள்ளை தான் அரசனாக வேண்டுமே தவிர இப்போது இளவரசனாக இருக்கும் உமது மகன் தேவவிரதனை நீ எக்காலத்திலும் அரசன் ஆக்கக் கூடாது. இது தான் எனது சிறிய நிபந்தனை. இதற்கு நீர் ஒப்புக் கொண்டால், உடனே எனது மகளின் திருமணத்தை உம்முடன் நான் நடத்துகிறேன்" என்றான்.  

அதனைக் கேட்ட சந்தனு, "எனது ஆசைக்காக இளவரசன் தேவவிரதனின் உரிமையை மறுப்பதா? இது அநியாயம் அல்லவா?" என்று தனக்குள் சிந்தித்தவனாக அம் மீனவத் தலைவனிடம் எதுவும் பேச விரும்பாமல் தனது ரதத்தில் ஏறி அஸ்தினாபுரத்தின் அரண்மனைக்குத் திரும்பினான்.

அவ்வாறு அஸ்தினாபுரத்தின் அரண்மனைக்குத் திரும்பிய சந்தனு கவலை கொண்ட முகத்துடன் சத்தியவதியின் நினைவாகவே இருந்தான். தந்தை எப்போதும் போல இல்லாமல் கவலை கொண்ட முகத்துடன் இருப்பதைக் கண்டான் தேவவிரதன். உடனே தந்தையின் தேரோட்டியை அழைத்தான், அவன் மூலம் நடந்ததை அறிந்தான். மறுகணம், தனது தேர் சாரதியை அழைத்து உடனே யமுனையின் அக்கறைக்கு மீனவத் தலைவனை பார்க்கச் சென்றான்.  

பீஷ்ம சபதம்
அப்போது அந்த மீனவத் தலைவனை சந்தித்த தேவவிரதன் அவனிடம், "உங்கள் மகளை என் தந்தைக்குத் திருமணம் செய்து வையுங்கள். எனது தந்தையின் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். அதற்காக நான் எதையும் செய்வேன். அரியணையில் என்றும் நான் அமர மாட்டேன், உங்கள் பேரனே அதில் அமர்வான். இது நான் உங்களுக்குத் தரும் வாக்குறுதி" என்றான்.

- தொடரும்

No comments:

Post a Comment