Sunday, July 19, 2020

மகாபாரதம் பகுதி 20

பீஷ்மர் செய்த பாவம்

பீஷ்ம - பரசுராம யுத்தம்


அம்பாவின் கண்ணீர் துளிகள் பரசுராமரின் மனதையே கரைத்தது. அப்போது பரசுராமர் அம்பாவிடம்,"மகளே! தவறு செய்தது யாராக இருந்தாலும் சரி, ஏன்? எனது தலை சிறந்த மாணவனான பீஷ்மனாகவே இருந்தாலும் சரி. நான் அவனை விடப் போவதில்லை. கண்டிப்பாக தண்டிப்பேன்" என்றார்.

உடனே அஸ்தினாபுரத்துக்கு ஒரு தூதுவனை அனுப்பினார் பரசுராமர். அவர் சென்று பரசுராமரின் செய்தியைத் தாங்கிய ஓலையுடன் பீஷ்மரை சந்தித்தார். தனது குருவான பரசுராமரிடம் இருந்து ஓலை வந்து உள்ளதாக கேள்விப்பட்டவுடன் பீஷ்மர் மிகவும் மகிழ்ந்தார். உடனே தூதுவனாக வந்த முனிவரை வணங்கி வரவேற்றார். பிறகு பரசுராமரின் செய்தி தாங்கிய ஓலையை வாங்கிப் படித்தார். 

அதில் பரசுராமர் " பீஷ்மா! நீ அம்பா என்னும் பெயர் கொண்ட அப்பாவிப்  பெண்ணின் வாழ்வை அழித்து விட்டதாக நான் கேள்விப்பட்டேன். அவள் இப்போது என்னிடம் நியாயம் கேட்டு வந்து இருக்கிறாள். எனக்கு வேறு வழி இல்லை. நான் அவளுக்கு அபயம் அளித்து விட்டேன். 

ஆதலால், வா என்னுடன் யுத்தம் செய்ய, ஒருவேளை நீ தோற்றாள் கண்டிப்பாக அம்பாவை நீ மணந்தே ஆக வேண்டும். அப்படி நான் தோற்றாள், எனது இந்த எண்ணத்தையே மாற்றிக் கொள்கிறேன், வா துவந்த யுத்தம் செய்ய. நானும் எனது சிஷ்யனான உனது வில் ஆற்றலை காண விரும்புகிறேன்" என்று எழுதி இருந்தார்.

பரசுராமர் எழுதிய செய்தியைப் படித்த பீஷ்மர். பரசுராமரின் சித்தப் படியே யுத்தம் செய்ய ஒரு களத்தை தேர்ந்தெடுத்து, அதற்கான நாளையும் குறித்து (பரசுராமருடன்) யுத்தம் செய்யப் புறப்பட்டார். ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவரான பரசுராமரும், அவ்வாறே தனது திவ்ய பாணங்களுடன், கையில் விஷ்ணு அவருக்கு அளித்த வில்லை ஏந்தியபடி கங்கை மைந்தன் பீஷ்மரை எதிர் கொண்டார்.

பரசுராமருடன் யுத்தம் புரிந்த பீஷ்மர்
அப்போது யுத்த களம் வந்த பீஷ்மர் தான் தேரில் நிற்பதையும், பரசுராமர் பூமியில் நிற்பதையும் கண்டார். அக்கணம், பீஷ்மர் பரசுராமரிடம், "குருவில் சிறந்தவரே! உம்மை வணங்குகிறேன், நான் ரதத்தில் நிற்கிறேன். நீரோ பூமியில் நிற்கின்றீர். இது சரியான யுத்தம் ஆகாது. நான் உடனே தங்களுக்கு ஒரு ரதத்தை ஆயத்தப்படுத்தித் தருகிறேன், அதில் தாங்கள் ஏறியபடி என்னுடன் யுத்தம் செய்யலாம்" என்றார்.

பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்ட பரசுராமர் சிரித்தபடி, "அன்பு சிஷ்யனே! உன் போன்றவர்களுக்குத் தான் யுத்தம் செய்ய இது போன்ற அழியக் கூடிய ரதங்கள் தேவை. ஆனால், என்னைப் போன்றவர்களுக்கோ வானமே குடை, பூமியே ரதம், நான் கற்ற அழியாத நான்கு வேதங்களே, அந்த ரதத்தில் பூட்டிய குதிரைகள். நான் இதுவரையில் செய்த தவ பலன்களே எனது ரதத்தின் சாரதி" என்று கூறி ஆகாயத்தில் நின்றார். 

அது கண்ட பீஷ்மர் அக்கோலத்தில் தனது குருவான பரசுராமரை வணங்கி யுத்தம் செய்யத் தயார் என்று சொல்லும் படியாக தனது வில்லில் நாணொலி செய்தார். அக்கணமே பரசுராமரும் தனது நாராயண வில்லில் உலகம் நடுங்க நாணொலி செய்தார். பீஷ்ம பரசுராம யுத்தம் தொடங்கியது. அதைக் காண தேவர்கள் வானில் கூடினார்கள்.

சிறந்த வில்லாளிகளான பீஷ்மரும், பரசுராமரும் வாயுவை விட அதிவேகத்தில் ஒருவர் மேல் ஒருவர் பாணத்தை எய்தனர். அவைகள் ஆயிரக்கணக்கான பாணங்களாக மாறி ஒன்றுடன், ஒன்று மோதி ஆகாயத்தில் அம்பு மழையைப் பொழிந்தது. இப்படி அவர்கள் இரவு, பகலாக பாணங்களை தொடுத்த வண்ணம் இருந்தனர். 

- தொடரும்

No comments:

Post a Comment