Saturday, July 18, 2020

மகாபாரதம் பகுதி 19

பீஷ்மர் செய்த பாவம்

பீஷ்மர் பரசுராமர் யுத்தம்

அம்பா கோபம் தெறிக்க," பீஷ்மா! உன்னால் நான் அன்று அவையில் மானத்தை இழந்தேன், இப்போதோ வாழ்வை இழந்தேன். இனி நான் உன்னை விடப் போவதில்லை. உன்னை நிச்சயம் இதற்குப் பழி வாங்குவேன். ஒரு பெண், என்ன செய்ய முடியும்? என்று தானே நினைக்கிறாய். இந்த நாளை உனது வாழ்வில் குறித்துக் கொள். உனது சாவுக்கு நானே காரணம் ஆவேன்" என்று சபதம் செய்தாள்.

பீஷ்மரும் தான் செய்த காரியத்திற்காக அவளிடம் ஒரு வாக்கினை கொடுத்தார் அஸ்தினாபுரத்தில் பாதுகாக்கும் பணியை தான் மேற்கொண்டு இருப்பதால் என்னுடைய பணிகள் முடிவடைந்த நிலையில் உன்னுடைய அடுத்த பிறவியில் உன்னுடைய சபதத்தை நிறைவேற்றும் வகையில் என்னை கொல்ல போர்க்களத்தில் என் முன் எப்போது தோன்றுகிறாயோ அப்போது உனக்காக நான் என் அஸ்த்திரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து நிற்பேன் இது நான் உனக்கு தரும் வாக்காகும்.

அதனைக் கேட்ட அம்பை அப்படி என்றால் நான் மறு ஜென்மம் கண்டிப்பாக எடுப்பேன் என்று அஸ்தினாபுரத்தின் அவையை  விட்டு அடிபட்ட புலி  போல கண்ணீர் மல்க வெளியேறினாள்.
 
அவ்வாறு சென்றவள் ஒரு நதிக் கரையில் அமர்ந்து அழுதபடி இரவும் பகலுமாக இருந்தாள். ஆகாரத்தைக் கூடத் தவிர்த்தாள். அதனால் உடல் மெலிந்தாள். ஆனால், பீஷ்மனைப் பழி தீர்க்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை மட்டும் அவள் மாற்றிக் கொள்ளவே இல்லை. 

இப்படியே நாட்கள் நகர்ந்தன, அப்போது அங்கு வந்த முனிவர் கூட்டத்தினர் அம்பாவின் பரிதாப நிலையைக் கண்டார்கள். அவளை நெருங்கி விஷயத்தை அறிந்து கொண்டார்கள். அப்போது அங்கு உள்ள முனிவர்களில் மிகவும் வயதானவரான ஒருவர் அம்பாவிடம், "அருமை மகளே! நீ அழாதே அம்மா! உனது சோகம் மிகவும் பெரியது தான். அதற்கு ஆறுதல் கூற என்னாலும் இயலாது. ஆனால், உனது சோகம் தீர ஒரு வழி உள்ளது மகளே" என்றார்.

அது கேட்ட அம்பா சற்றே மனதில் நம்பிக்கை பூத்தவளாக, மகிழ்ச்சியுடன் அந்த மாமுனிவரின் முகத்தை நோக்கி," ஐயனே! எனது துயர் தீர வழி உள்ளதா? அது என்ன வழி? உடனே கூறுங்கள். நான் எனது உயிரைக் கொடுத்தாவது இப்போதே அதனை செய்கிறேன்" என்றாள்.

பரசுராமர்
அப்போது முனிவர்களின் மூத்தவரான அந்தப் பெரியவர், "மகளே! நீ உனது உயிரைக் கொடுக்கத் தேவை இல்லை. பீஷ்மர் போன்ற கொடுமை புரியும் சத்திரியர்களை ஆதி காலம் முதல் எதிர்த்து அழித்தவர் பரசுராமர். அவர் இப்போது இமயமலையின் அடி வாரத்தில் வசித்து வருகிறார். நீ உடனே சென்று அவரைப் பார். அவரால் தான் பீஷ்மரை எதிர்க்க முடியும். காரணம், பீஷ்மருக்கு வில் வித்தையை கற்றுக் கொடுத்தவரே அவர் தான்" என்றார்.  

அதனைக் கேட்ட அம்பா, தனக்கு நல்வழி காட்டிய அந்த வயோதிக முனிவரை வணங்கி விட்டு, அவர் சொன்ன இமயமலையின் அடிவாரத்தை அடைந்து பரசுராமரை சந்தித்தாள். பிறகு அவரிடம் தனக்கு பீஷ்மரால் நேர்ந்த கொடுமைகளை எல்லாம் சொல்லி, உதவி கேட்டு அழுது நின்றாள்.

- தொடரும்

No comments:

Post a Comment