Friday, July 3, 2020

மகாபாரதம் பகுதி 4

கங்கையின் விருப்பம்


    சந்தனுவின் தந்தையான பிரதீபன் துறவு மேற்கொண்டு ஒரு நாள் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டு இருந்தான். அக்கணம், கங்கை பெண் உருவம் கொண்டு அவனுடைய வலது தொடையில் அமர்ந்தாள். அதனால், திடுக்கிட்ட பிரதிபன் கண்களைத் திறந்தான். அப்போது ஒரு பெண் தனது வலது தொடையில் அமர்ந்து இருப்பதைக் கண்டான். உடனே அவளைப் பற்றி விசாரித்தான். அப்போது அந்தப் பெண் தன்னை "கங்கை” என்று அறிமுகம் செய்து கொண்டாள். 

சந்தனுவும் கங்கையும்
ஆம்! முன்பு பிரமனின் கமண்டலத்தில் இருந்து விஷ்ணுவின் பாதத்தை அடைந்து, பின் சிவனின் ஜாடாமுடியில் பகீரதன் தவத்தால் தஞ்சம் அடைந்த அதே கங்கை தான் இப்போது பிரதீபனின் மடியில் அமர்ந்து இருந்தாள். அப்போது பிரதிபன் சிறிது நேரம் தனது மடியில் அமர்ந்து இருந்த கங்கையை அமைதியாக கூர்ந்து நோக்கினான். 

பிறகு அவளிடம், "கங்கை என்னும் பெயர் கொண்ட பெண்ணே! நீ என் வலது தொடையில் அமர்ந்துவிட்டாய் அதனால் மகளுக்கு சமமாக ஆகிறாய். ஒரு மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை உன் விருப்பம் என்ன மகளே? எதுவாகிலும் சொல் நான் நிறைவேற்றுகிறேன்" என்று கேட்டான். 

அதற்கு கங்கை," அரசர்களுள் சிறந்தவரே! நான் உங்கள் மகன் சந்தனுவை மணம் முடிக்க விரும்புகிறேன்" என்றாள் . 

கங்கையின் விருப்பத்தைக் கேட்ட பிரதீபன் முன்பு தான் அவளுக்குக் கொடுத்த வாக்கின் படி, ”அப்படியே நடக்கும்!” என்று கூறி ஆசி வழங்கினான். கங்கையும், அக்கணம் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றாள்.

இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு தந்தையைக் காண வனத்திற்கு வந்தான் சந்தனு. அப்போது தன்னை நாடி வந்த சந்தனுவை கண்டு மகிழ்ந்தான் பிரதீபன். சந்தனு பிரதீபனின் கால்களில் விழுந்து வணங்கினான். பிறகு தனது தந்தையான பிரதீபனிடத்தில், ”தந்தையே! நான் ஒரு நல்ல அரசனாக வாழ்ந்து வருகிறேன். ஆனால், ஒரு நல்ல மகனாக இருக்கிறேனா! என்ற ஐயப்பாடு பல நாட்களாக எனக்கு உண்டு. அதனால், தான் அதைத் தீர்த்துக் கொள்ள நான் உங்களை இன்று  அணுகினேன். தங்களுக்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும் உள்ளதா? இல்லை, உங்கள் விருப்பத்தை ஏதேனும் நான் புறக்கணித்தது உண்டா? எனில் அதனை நான் நிறைவேற்றத் தயாராக உள்ளேன்” என்றான்.

அப்போது அவனுக்கு ஆசி வழங்கிய பிரதீபன் அவனிடம், ”மகனே சந்தனு! எனக்கு ஒரு விருப்பம் உண்டு அது யாதெனில், கங்கை என்ற அழகான பெண் உன்னை அணுகி திருமணம் செய்துகொள்ள விரும்புவாள், அவளது ஆசையை நீ நிறைவேற்ற வேண்டும்” என்றார். 

அக்கணமே, சந்தனுவும், தனது தந்தையின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டான்.

- தொடரும்

No comments:

Post a Comment