Wednesday, July 15, 2020

மகாபாரதம் பகுதி 15

பீஷ்மர் செய்த பாவம்


    தாய் சத்தியவதியின் ஆணையை ஏற்று தனது ரதத்தில் ஏறி தனி ஒரு ஆளாக காசியின் அரண்மனையை அடைந்தார் பீஷ்மர். அக்கணமே சுயம்வர மண்டபத்தை நோக்கி வில்லேந்திய கைகளுடன், போர்கோலம் பூண்டு கோபத்துடன் நுழைந்தார் அவர். அப்போது சுயம்வர மண்டபத்தில், அச்சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்து இருந்த பல நாட்டு அரசர்களும், பீஷ்மர் அங்கு வந்ததன் காரணத்தை அறியாமல்.

பீஷ்மரின் கோபத்தை தூண்டும் வகையில்," காசியின் இராஜ குமாரிகளைப் பார்த்து, பீஷ்மரே ஆசை கொண்டார் போலும். அதனால் தான் அழைப்பு இல்லாமலேயே, தனது சபதத்தையும் மறந்து காசிக்கு வந்து விட்டார் பாருங்கள்!" என்று கூறி கேலி செய்து சிரித்தார்கள். 

பீஷ்மரின் மனதளவில் ஏற்கனவே கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பிலே, எண்ணெய்யை ஊற்றியது போல இருந்தது அந்த அரசர்களின் ஏளனச் சிரிப்பு. அக்கணமே, உலகம் நடுங்க தனது வில்லில் நாணொலியை ஏற்படுத்தினார் பீஷ்மர். அதனால் அங்கு வந்து இருந்த அரசர்கள் அனைவரும் நடுங்கினர். 

அத்துடன் பீஷ்மர் அவையில் இருந்த அரசர்களைப் பார்த்து, "நான் இந்த மூன்று இராஜகுமாரிகளையும் அஸ்தினாபுரத்துக்கு கவர்ந்து செல்கிறேன். அத்துடன் இவர்கள் மூவரையுமே அஸ்த்தினாபுரத்து அரசனான விசித்திர வீரியனுக்கு மணம் முடிக்கப் போகிறேன். என்னைத் தடுப்பவர்கள் தடுத்துப் பாருங்கள்" என்று கூறியபடி மூன்று இராஜ குமாரிகளையும் கைது செய்து இழுத்து வந்து தனது இரத்தத்தில் ஏற்றினார். 

அப்போது பீஷ்மரைத் தடுக்க அவ்விடத்தில் எந்த ஒரு அரசனுக்கும் தைரியம் வர வில்லை.

மறுபுறம், பீஷ்மரின் ரதம் விரைவாக அஸ்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. காசி ராஜனோ, தனது ஆசையுடன், தனது மகள்களின் ஆசைகள், கனவுகள், எல்லாம் சிதைந்து போகிறதே என்று கலங்கித் தவித்தான். இருந்தாலும், அவனால் பீஷ்மரை எதிர்க்க இயலாததால் தலை குனிந்து நின்றான்.

-தொடரும்

No comments:

Post a Comment