Wednesday, November 24, 2021

குரு தேஜ் பகதூர்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குருதேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று (24.11.1675)

தர்மத்தின் வழி நிற்பதா? இல்லை.. மரணத்தைத் தழுவுவதா? என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.

சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் நாள் அமிர்தசரஸ் நகரில் பிறந்தார். இயற்பெயர் தியாகாமால். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். அமிர்தசரஸ் நகரம் சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக இருந்தது.

சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரர், சிறந்த கவிஞர் மற்றும்  தத்துவ ஞானி. இவரது முயற்சியால் பல இடங்களில் குடிநீர் குளங்களும், லங்கர் எனப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களும் அமைக்கப்பட்டது. அனந்தபூர் சாஹிப் நகரத்தை உருவாக்கினார். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் இவர்  இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் உள்ளது.

ஹிந்து தர்மத்தை காப்பதற்காக சீக்கிய குருமார்கள் போராடினர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என முகலாயர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஔவுரங்கசீப் காலத்தில் காஷ்மீர் பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதமாற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர்  பண்டிதர்கள் அடைக்கலம் நாடினர்.

'நானும் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான், அந்த பிராமணர்களும்
மாறுவார்கள்', என்று ஒளரங்கசீப்புக்குத் தகவல் அனுப்பினார் பகதூர். அதனால் முகலாயப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்று இஸ்லாமியராக மாற வேண்டும் அல்லது மரணம். தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று பதிலளிக்க,  பகதூரின்  தலையை வெட்டி கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு தேஜ் பகதூரின் மகனும், சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடையவர்களாக சீக்கியர்களை உருவாக்கினார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர் பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடினர்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும், பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும்.

No comments:

Post a Comment