Sunday, November 21, 2021

மௌனம்..

ஒரு குதிரையில் வெளியூர் சென்று கொண்டு இருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுத்து செல்லலாம் என்று எண்ணி குதிரையை விட்டு இறங்கி குதிரையை அருகில ஒரு மரத்தில் கட்டினான்.

குதிரை உண்பதற்கு புல் போட்டு விட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான். அப்போது அங்கிருந்த ஒரு குறும்புக்கார இளைஞன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான். இதைப் பார்த்த அந்த வழிப்போக்கன், "தம்பி, இது முரட்டு குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே. அது உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான்.

அந்த இளைஞன் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் மீண்டும் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான். குதிரையால் வலியைப் பொறுக்க முடியவில்லை விட்டது ஒரேயொரு உதை. அந்த இளைஞன் நாலைந்து குட்டிக்கரணம் போட்டு சிறிது தொலைவில் விழுந்தான். முன் பற்கள் விழுந்ததோடு மட்டுமின்றி நல்ல காயமும் அவனுக்கு ஏற்பட்டது. "இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா?" என்று கூச்சலிட்டான். அங்கே கூட்டம் கூடிவிட்டது.

"என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அந்த வந்தேறியான குதிரையின் சொந்தக்காரன் தான்" என்றான். தனக்கு இழப்பு தொகையோ அல்லது அந்த குதிரை உரிமையாளனுக்கு தண்டனையோ தர வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். வழக்கு தொடங்கியது.

குதிரை சொந்தக்காரனைப் பார்த்து நீதிபதி, "இந்த முரட்டுக் குதிரை உன்னுடையது தானா?" என்று கேட்டார். ஆனால் அவனோ பதில் ஏதும் சொல்லவில்லை. "உன் குதிரையால் தான் இவனுக்கு இவ்வளவு காயம் ஏற்பட்டது. இதற்கு என்ன சொல்கிறாய்?" என்று மீண்டும் கேட்டார் நீதிபதி. இப்போதும் ஒன்றும் சொல்லவில்லை அவன். மௌனமாக இருந்தான்.

இதைக் கண்ட நீதிபதி, "இவன் ஒரு செவிட்டு ஊமை போல இருக்கிறான். என்ன கேட்டாலும் பதில் பேசாமல் இருக்கிறானே" என்றார். உடனே வழக்கு தொடுத்த அந்த இளைஞன், "என்ன வாயிலே கொழுக்கட்டையா வச்சு இருக்கே? இது முரட்டு குதிரை… வாலைப் பிடித்து இழுக்காதே… குதிரை உதைத்தால் பல்லெல்லாம் போய்விடும்னு அப்போ த்தினாயே? இப்போது வந்து செவிட்டு ஊமை போல நடித்து ஏமாற்றவா பார்க்கிறாய்?" என்று கோபத்துடன் கத்தினான்.

இதைக் கேட்டதும் நீதிபதிக்கு உண்மை புரிந்தது. வழக்கு தொடுத்தவனைப் பார்த்து, "அவர் எச்சரிக்கை செய்த பின்னும் அந்த குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தாயா?" என்று கேட்டார். அவன் தலை கவிழ்ந்து நின்றான். குதிரையின் சொந்தக்காரன், "நீதிபதி அவர்களே! தங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே ஊமை போல நடித்தேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்றான். வழக்கு தொடுத்தவனைக் கடுமையாக கண்டித்து அனுப்பிய நீதிபதி குதிரை சொந்தக்காரனின் அறிவு கூர்மையை பாராட்டினார்.

இந்த கதை சொல்லும் கருத்து:
"உண்மையை சத்தமாகச் சொல்லி வெளியே கொண்டு வருவதை விட, சில நேரங்களில் மௌனம் கூட உண்மைக்கு வழி வகுக்கும்."
"பேசும் நேரத்தை போல பேசாத நேரத்திலும் சற்று யோசிப்போமா??"

No comments:

Post a Comment