சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.
செப்டம்பர் 24, 2010 சக நண்பர்களுடன் வேனில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தபோது, வேன் திடீரென தீப்பிடித்தது.
டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
ஆனால் ஓம் பிரகாஷ் யாதவ் பயத்தில் அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.
கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் நண்பர்களை காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.
தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும்.
கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது.
இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.
வாராணசி மருத்துவமனையில் 18 நாட்களும், அசம்கட் மருத்துவமனையில் 42 நாட்களும் சிகிச்சைப் பெற்று மீண்டான்.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.
இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி 2012 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தார்.
அப்போது அவனுடைய வயது 10. அவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநர். விருதுப் பணம் 1.4 லட்சம் சிறுவனுடைய சிகிச்சைக்கே செலவானது என்று தெரிவித்துள்ளார்.
பெரும் பணக்காரர்களுக்கு தரும் விருதில் பணத்தைக் கொடுக்காமல் இது போன்ற ஏழை மக்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்குமே!! அரசாங்கம் மனதில் ஏற்றினால் நல்லது. நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவோடு பகிர்கிறேன்.


No comments:
Post a Comment