Wednesday, December 22, 2021

குழந்தைகளை திட்டுங்கள்!!

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

  1. ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், "டீச்சர் திட்டினார்", "அம்மா முறைத்தாள்", "அப்பா அடிக்க கையை ஓங்கினார்" எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்.
  2. பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்.
  3. தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்

அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.

"குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?" என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.

ஒரு தலைமுறை முன்பு வரை நம்மைப் பெற்றோர் திட்டித் தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?

பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.

இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத் திறனும் நினைவுத் திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாட வேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

அதைவிடுத்து, "நான் தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது" என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், "அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்" என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சிறு வயதிலிருந்து "ஏய்" என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று "பிள்ளை கைமீறிப் போகிறதே" என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல், பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.

குழந்தைகளைத் தண்ணீர் போல வளர்க்க வேண்டும். அப்போது தான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.

  1. ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக் கொள்வது.
  2. அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது.
  3. தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது.
  4. மற்றவர்களை மன்னிப்பது.
  5. தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது.

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.

இளஞ்செடியாக இருக்கும் போது வேலி போடுவது தான் புத்திசாலித் தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.

எனவே, "அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க" என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.

No comments:

Post a Comment