வீரப்பெண் குயிலி
![]() |
| குயிலி |
வீரம் விளைந்த மண் நம் தமிழகம் என்பது நம்
எல்லோருக்குமே தெரிந்தது தான். நம் தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற வீரர்கள் தங்கள்
உயிரை துச்சமென மதித்துத் தியாகம் செய்தனர். அதே போல் நமது பெண்களும் அவர்களுக்கும்
மேலாகத் தியாகம் செய்திருக்கின்றனர். அப்படிப்பட்டப் பெண்களில் ஒருவர் தான் வீரப்பெண்
குயிலி.
சிவகங்கை சமீபத்தில் உள்ள பாசங்கரை எனும்
ஊரில் பெரியமுத்தன் -ராக்கு தம்பதியின் ஒரே மகளாக குயிலி பிறந்தார். சிறு வயதில் தாயை
இழந்த பின் குயிலியும் அவர் தந்தையும் சிவகங்கை சமீபத்தில் உள்ள முத்துப்பட்டி என்ற
ஊருக்கு குடிபெயர்ந்தனர்.
சிறு வயதிலிருந்தே குயிலி அவர்கள் ராணி
வேலு நாச்சியாரின் வீரம் மற்றும் விவேகத்தால் பெரிதும் கவரப்பட்டார். ஒரு சமயம் தந்தையும்
மகளும் ராணியை பார்க்க வேண்டும் என்று காவலரிடம் அனுமதி வேண்டினர். அப்போது அனுமதி
மறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ராணி, உடனடியாக
அவர்களை அழைத்தார். மேலும் தந்தையையும் மகளையும் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும்
செல்ல அனுமதி வழங்கினார். காலப்போக்கில் தந்தையும் மகளும் வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்கும்
அன்பிற்கும் பாத்திரமானார்கள்.
1773ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை
ஆங்கிலேயர்கள் நயவஞ்சமாக கொன்று, பின்னர் அரண்மனையையும் கைப்பற்றினார்கள். இதன் பின்
ராணி வேலு நாச்சியார் சுமார் 8 ஆண்டு காலம் தலை மறைவாகவே இருந்து வந்தார்.
ஒரு சமயம் வேலு நாச்சியாரின் சிலம்பாசிரியர்
வெற்றிவேல் என்பவர் ஒரு ஓலையைக் கொடுத்து குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைக்குமாறு கூறி,
கூடவே கூலியாக ஒரு பையையும் கொடுத்தார். அந்த ஓலையானது வேலு நாச்சியாரின் போர் நுட்பங்களைப்
பற்றியது என்று அறிந்த குயிலி வெகுண்டெழுந்து வெற்றிவேலை வெட்டி வீழ்த்தினார்.
சம்பவ இடத்திற்கு வந்த வேலு நாச்சியார்
ஓலையை படித்தப் பின் தன் சிலம்பாசிரியர் ஒரு ஆங்கிலேய ஒற்றன் என்பதை அறிந்தார். தன்னிடம்
குயிலிக்கு இருந்த விசுவாசத்தை மெச்சி அவரை தன் அந்தரங்க காவலராக நியமித்தார்.
இன்னொரு சமயம் வேலு நாச்சியார் ஆழ்ந்த தூக்கத்தில்
இருந்த பொழுது அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது ஒரு குறு வாள் வீசப்பட்டது.
அருகில் இருந்த குயிலி தன் வெறும் கையினால் அந்த வாளை தடுத்தார். தூக்கத்திலிருந்து
எழுந்த வேலு நாச்சியார் குயிலி கையில் ரத்தம் பெருகுவதை கண்டார். நிலைமையை புரிந்து
கொண்டு தானே குயிலிக்கு மருந்து கட்டு போட்டு விட்டார். குயிலியை தன் மகளாகவே வேலு
நாச்சியார் பாவித்தார். குயிலியும் அவர் தந்தையும் வேலு நாச்சியாரின் அந்தரங்க ஒற்றர்கள்
என்றறிந்த ஆங்கிலேயர்கள் எப்படியாவது குயிலியை கொலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர்.
1780ல் மருதுபாண்டியர் தலைமை மற்றும் ஹைதர்
அலி படை உதவியுடன் சிவகங்கையை மீட்க வேலு நாச்சியார் படை எடுத்தார். இந்த முயற்சியில்
பெண் படைக்கு குயிலி தலைமை வகித்தார். வேலு நாச்சியார், மல்லாரிராயன் என்பவரையும் மற்றும்
தளபதி ஜோசப் ஸ்மித் என்பவரையும் வெட்டி வீழ்த்தினார்.
ஆங்கிலேயர்கள் சிவகங்கை அரண்மனையை தங்கள்
ஆயுத கிடங்காக உபயோகித்து வந்தனர். கிடங்கையையும் அதன் சுற்றுப்புறத்தையும் நன்றாகவே
பாதுகாத்து வந்தனர். ராணி வேலு நாச்சியார் அவர்களின் இறுதி போரில் தோற்றுவிடக்கூடாது
என்பதில் குயிலி மிகவும் குறியாக இருந்தார். இது சம்பந்தமாக உளவு வேலையும் ஆரம்பித்தார்.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி
ஆலயத்தில் விஜயதசமி அன்று தரிசனம் செய்ய எல்லா பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ராணி வேலு நாச்சியார், குயிலியுடன் பெண் படை அரண்மனைக்குள் புகுந்தது .கோயிலில் தரிசனத்தை
முடித்துக்கொண்டு வெளியேறும் தருணம், “வெற்றிவேல்!! வீரவேல்!!!” என்று முழங்கியபடி
அங்கிருந்த ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினர்.
இதற்கிடையில் குயிலி தன் உடல் முழுவதும்,தீப
நெய் ஊற்றிக்கொண்டு தனக்கு தீயூட்டிக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்தார் . ஆயுதக் கிடங்கில்
இருந்த அனைத்து வெடி மருந்துகளும் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.
குயிலியின் தற்கொலை பற்றி அறிந்த ராணி மிகவும்
மனவேதனை அடைந்தார். நாட்டின் விடுதலை போரில் தன்னையே ஈன்றவர் குயிலி. குயிலுக்கு பாசங்கரை
கிராமத்தில் ஒரு நினைவு சின்னம் இருக்கிறது. அப்பகுதி மக்கள் அவரை தீப்பாஞ்ச அம்மன்
என்று வழி படுகிறார்கள்.

No comments:
Post a Comment